- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- குஜராத்
- இந்தியா
- சிஎம்எஃப்ஆர்ஐ
- நாகர்கோவில்
- மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம்
- ஐசிஏஆர்-சிஎம்எஃப்ஆர்ஐ
நாகர்கோவில்: மத்திய கடல்சார் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் (ICAR-CMFRI) வெளியிட்டுள்ள ‘2025-ஆம் ஆண்டு இந்திய கடல் மீன் உற்பத்தி’ குறித்த வருடாந்திர அறிக்கையில், கடல் மீன் உற்பத்தியில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக உருவெடுத்துள்ளது. கடந்த பல ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்த குஜராத் மாநிலத்தை பின்னுக்குத் தள்ளி தமிழ்நாடு இந்தச் சாதனையை படைத்துள்ளது.
இந்தியாவில் மீன் உற்பத்தியில் கன்னியாகுமரி, சென்னை உள்ளிட்ட தமிழ்நாடு கடலோர பகுதிகள் முக்கிய பங்கு வகிக்கிறது. 2025ல் தமிழ்நாட்டின் கடல் மீன் உற்பத்தி 6.85 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 1 சதவீத வளர்ச்சியாகும். இதன் மூலம், 6.43 லட்சம் டன் உற்பத்தி செய்த குஜராத்தை விஞ்சி, தமிழ்நாடு இந்தியாவின் முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது. குஜராத் மாநிலத்தின் உற்பத்தி மோசமான வானிலை மற்றும் மீன்பிடி தடைகள் காரணமாக 15 சதவீதம் சரிவை சந்தித்ததே தமிழ்நாடு முதலிடத்திற்கு வர முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
2025ல் இந்தியாவின் ஒட்டுமொத்த கடல் மீன் உற்பத்தி 3.57 மில்லியன் டன்களாக (35.7 லட்சம் டன்) மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2024-ம் ஆண்டை (3.47 மில்லியன் டன்) விட 3 சதவீதம் கூடுதலாகும். தேசிய அளவில் அதிகம் பிடிக்கப்பட்ட மீன் வளங்களில் இந்திய அயலை (2.70 லட்சம் டன்) முதலிடம் பிடித்துள்ளது. இதனைத் தொடர்ந்து செபலோபாட்கள் எனப்படும் கணவாய் மீன் வகைகள் 2.57 லட்சம் டன் பிடிபட்டுள்ளது. இது கடந்த தசாப்தத்தில் இல்லாத அளவிற்கு 25% வளர்ச்சியடைந்துள்ளது.
மத்தி மீன் 2.53 லட்சம் டன், நூலில்லா மீன் வகைகள் 2.33 லட்சம் டன் (55% அதிரடி வளர்ச்சி), வாளை மீன் 2.30 லட்சம் டன்பிடிபட்டுள்ளது. பொருளாதார மதிப்பு: இந்திய கடல் மீன் பிடிப்பின் ஒட்டுமொத்த பொருளாதார மதிப்பு கணிசமாக உயர்ந்துள்ளது. மீன்பிடித் துறைமுகங்களில் (Landing Center) இதன் மதிப்பு ரூ.69,254 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது (10.45% உயர்வு). சில்லரை விற்பனை சந்தையில் இதன் மதிப்பு ரூ.97,702 கோடியாக உள்ளது (8.43% உயர்வு). இந்தியாவின் ஒட்டுமொத்த மீன் உற்பத்தியில் விசைப்படகுகளின் பங்களிப்பு 81.7 சதவீதமாக உள்ளது.
மோட்டார் பொருத்தப்பட்ட படகுகள் 17.8 சதவீதமும், பாரம்பரியப் படகுகள் வெறும் 0.5 சதவீதமும் பங்களிப்பு செய்துள்ளன. தமிழ்நாடு மற்றும் கேரள கடற்கரைப் பகுதிகளை உள்ளடக்கிய தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு பகுதிகள் இந்தியாவின் ஒட்டுமொத்த மீன் உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கின்றன.
தமிழ்நாட்டின் இந்த நிலையான வளர்ச்சி, அப்பகுதி மீனவர்களின் நவீனத் தொழில்நுட்ப பயன்பாடு மற்றும் சீரான கடல் சூழலைக் காட்டுகிறது. அதேவேளையில் குஜராத் போன்ற மாநிலங்களில் ஏற்பட்ட புயல் பாதிப்புகள் மற்றும் வானிலை மாற்றங்கள் உற்பத்தியை பாதித்துள்ளன. இந்த அறிக்கையை கொச்சியில் உள்ள சி.எம்.எப்.ஆர்.ஐ தலைமையகம் வெளியிட்டுள்ளது.
* சின்ன மத்தி மீன்கள் ‘டாப்’
தமிழகக் கடற்கரையில் கடந்த ஆண்டில் அதிகம் பிடிபட்ட மீன் வகையாக ‘சின்ன மத்தி’ உள்ளது. மொத்தம் 70.39 ஆயிரம் டன் சின்ன மத்தி மீன்கள் பிடிக்கப்பட்டுள்ளன. இது முந்தைய ஆண்டை விட 9 சதவீதம் சரிவு என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து கணவாய் மீன்கள் 45.25 ஆயிரம் டன். இந்திய அயலை 38.27 ஆயிரம் டன். காரப்பொடி மீன்கள் 34.72 ஆயிரம் டன். நெத்திலி மீன்கள் 34.58 ஆயிரம் டன் பிடிபட்டுள்ளன.
தமிழகத்தின் மீன் உற்பத்தியில் விசைப்படகுகளின் பங்களிப்பு 71.7 சதவீதமாக உள்ளது. மோட்டார் பொருத்தப்பட்ட படகுகள் 28.2 சதவீதமும், பாரம்பரியப் படகுகள் வெறும் 0.1 சதவீதமும் பங்களிப்பு செய்துள்ளன. குறிப்பாக, ஒற்றை நாள் மீன்பிடி விசைப்படகுகள் 44 சதவீத உற்பத்தியை ஈட்டித் தந்துள்ளன. ஆண்டின் மூன்றாவது காலாண்டான ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் அதிகபட்சமாக 34 சதவீத மீன்கள் பிடிக்கப்பட்டுள்ளன.
அக்டோபர் – டிசம்பர் காலத்தில் 26 சதவீதமும், ஜனவரி – மார்ச் காலத்தில் 25 சதவீதமும் மீன்கள் கிடைத்துள்ளன. கோடைக் காலமான ஏப்ரல் – ஜூன் மாதங்களில் குறைந்தபட்சமாக 15 சதவீத மீன்களே கிடைத்துள்ளன. தமிழக அரசின் முறையான மீன்பிடி மேலாண்மை மற்றும் மீனவர்களின் கடின உழைப்பால் தமிழகம் இந்தச் சாதனையை தக்கவைத்துள்ளதாக சி.எம்.எப்.ஆர்.ஐ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* கன்னியாகுமரி மாவட்டம் 23%
தமிழகத்தின் ஒட்டுமொத்த உற்பத்தியில் கன்னியாகுமரி மாவட்டம் 23 சதவீதப் பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து தூத்துக்குடி (16%), புதுக்கோட்டை (14%) மாவட்டங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன. சென்னை மீன்பிடித் துறைமுகம் மட்டும் 12 சதவீதப் பங்களிப்பை அளித்துள்ளது.
* புயல்களை தாண்டி முதலிடம்
கடந்த 2025-ல் தமிழகத்தின் ஒட்டுமொத்த கடல் மீன் உற்பத்தி 6.85 லட்சம் டன்களாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2024 ம் ஆண்டை விட 1 சதவீத வளர்ச்சியாகும். இதன் மூலம் இந்திய மாநிலங்களுக்கு இடையிலான தரவரிசையில் தமிழகம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வீசிய ‘மோந்தா’ மற்றும் ‘டிட்வா’ புயல்களால் மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்ட போதிலும், தமிழகம் இந்த சாதனையை எட்டியுள்ளது.
