×

ஐகோர்ட் கிளையில் அரசு வாதம் வனப்பகுதியில் நீர்வரத்து பாதையை ஆக்கிரமித்து தனியார் கட்டிய அணை: நேரில் வந்து ஆய்வு செய்வதாக நீதிபதிகள் அறிவிப்பு

மதுரை: கன்னிவாடி மலைப்பகுதியில் வனப்பகுதி நீர்வரத்து பாதையை ஆக்கிரமித்து தனியார் தரப்பில் அணை கட்டப்பட்டுள்ளதாக ஐகோர்ட் கிளையில் தமிழ்நாடு அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இதை நேரில் ஆய்வு செய்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர். கரூரைச் சேர்ந்த குணசீலன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி மலைக்கிராமத்தில் 93 ஏக்கர் பட்டா நிலம் வைத்துள்ளேன்.

எனது பட்டா நிலத்தில் அணை கட்ட கலெக்டர் மற்றும் வேளாண் பொறியியல் துறையிடம் உரிய அனுமதி பெற்று, சொந்த செலவில் அணை கட்டி முடித்தேன். எனது சொந்த செலவில் கட்டியுள்ள அணையை இடித்து அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளில் வனத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அணையை இடிக்கும் வனத்துறை அதிகாரிகளின் செயலுக்கு தடை விதிக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த தனி நீதிபதி, தடுப்பணையை இடிக்க இடைக்கால தடை விதித்து, இந்த வழக்கை நீர் நிலை தொடர்பான வழக்குகளை விசாரிக்க கூடிய சிறப்பு அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டார். இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன் ஆஜராகி, ‘‘மனுதாரர் வனப்பகுதியில் அத்துமீறி நீர்வரத்து பாதையை ஆக்கிரமிப்பு செய்து அணை கட்டி உள்ளார்.

200 ஏக்கர் பரப்பளவில் வனப்பகுதியையும் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இதனால், கீழ்ப்பகுதியில் உள்ள கிராமங்களுக்கு செல்லக்கூடிய தண்ணீர் தடைப்பட்டுள்ளது. வேண்டுமென்றால் நீதிபதிகள் நேரில் வந்து ஆய்வு செய்யலாம்’’ என்றார். மனுதாரர் தரப்பில் ஐசக் மோகன்லால் ஆஜராகி, ‘‘முறையான அனுமதி பெற்று தான் அணை கட்டப்பட்டுள்ளது, இதில் எவ்வித ஆக்கிரமிப்பும் இல்லை’’ என்றார். அப்போது நீதிபதிகள், ‘‘அணையை நாங்களே நேரில் வந்து ஆய்வு செய்கிறோம்’’ எனக்கூறி விசாரணையை ஜூன் 2க்கு தள்ளி வைத்தனர்.

Tags : Madurai ,Tamil Nadu government ,Court ,Kannivadi hills ,Gunaseelan ,Karur ,Madurai High Court… ,
× RELATED இறக்குமதி பருத்திக்கு வரி விதிப்பு...