×

யாரையாவது ஒருவரை குற்றவாளியாக்குவதா? தம்பதி கொலை வழக்கில் வியாபாரி இரட்டை ஆயுள் தண்டனை ரத்து: உண்மை குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும் ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு

மதுரை: தம்பதி கொலை வழக்கில் கைதானவரின் இரட்டை ஆயுள் தண்டனையை ஐகோர்ட் கிளை ரத்து செய்தது. விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், சவுண்டியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சோலைமலை. கணித ஆசிரியராக பணியாற்றியவர். மனைவி சரோஜா. ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தம்பதிக்கு குழந்தை இல்லை. சரோஜாவின் தம்பியான திருவாரூர் மாவட்டம், மருதுபட்டினம் பகுதியை சேர்ந்த துரையரசன் (52) பாத்திர வியாபாரம் செய்தார்.

இவர், சரோஜாவிடம் அடிக்கடி செலவுக்கு பணம் கேட்டு வந்துள்ளார். கடந்த 16.2.2014ல் ஸ்ரீவில்லிபுத்தூர் வந்த துரையரசன் பணம் கேட்டு சரோஜாவிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது பணம் தர மறுத்ததால் சரோஜாவையும், அவரது கணவர் சோலைமலையையும் தலையில் கிரைண்டர் கல்லை போட்டு துரையரசன் கொலை செய்துவிட்டு, சரோஜா அணிந்திருந்த நகைகள் மற்றும் வீட்டிலிருந்த தங்க நகைகளை திருடி சென்றதாக ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்கு பதிந்து துரையரசனை கைது செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு மகளிர் நீதிமன்றம், துரையரசனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. இந்த தண்டனையை எதிர்த்து துரையரசன், ஐகோர்ட் மதுரை கிளையில் மேல் முறையீடு செய்தார். மனுவை நீதிபதிகள் என்.ஆனந்த் வெங்கடேஷ், கே.கே.ராமகிருஷ்ணன் விசாரித்தார். மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கிறிஸ்டோபர் ஆஜராகி, ‘‘இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு விசாரணை நீதிமன்றம் சந்தேகத்தின் அடிப்படையில் தண்டனை வழங்கி உள்ளது.

காவல்துறை விசாரணையில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளது’’ என வாதிட்டார். இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கில் திருவாரூரைச் சேர்ந்த ஒருவர், சம்பந்தமே இல்லாத ஊரில் உள்ள விஏஓவிடம் சென்று சரணடைந்து வாக்குமூலம் அளித்தார் என்பது நம்பும்படியாக இல்லை. திருடப்பட்டதாகக் கூறப்படும் வளையல்கள் உயிரிழந்தவரின் உடலிலேயே இருந்ததைப் புகைப்படங்கள் காட்டுகின்றன.

எனவே, நகை மீட்பு நடவடிக்கை புனையப்பட்டதாகவே தெரிகிறது. குற்றம் சாட்டப்பட்டவரின் கைரேகைகள் சேகரிக்கப்பட்ட விதத்தில் முறையான நடைமுறை பின்பற்றப்படவில்லை, அதில் பல முரண்பாடுகள் உள்ளன. நம்பகமான ஆதாரங்கள் இல்லாத நிலையில், குற்றத்தின் தீவிரத்தையோ அல்லது அதன் கொடூரத்தையோ கண்டு வெறும் சந்தேகத்தின் அடிப்படையில் எந்தவொரு தண்டனையும் வழங்க முடியாது.

அரசு தரப்பு ஆதாரங்கள் நம்பிக்கையைத் தரவில்லை. அவை செயற்கையாகத் தோன்றுகின்றன. உண்மையான குற்றவாளியை அடையாளம் காண முடியாத விரக்தியில், நம்பகமான ஆதாரங்கள் மூலம் உண்மையை நிரூபிப்பதற்குப் பதிலாக ஒரு வழக்கைக் கட்டமைக்க முயன்றுள்ளதாகவே தெரிகிறது. குற்றம் சாட்டப்பட்டவரே இந்தக் குற்றத்தைச் செய்திருப்பார் என்ற ஆரம்பக்கட்ட சந்தேகம், அவரேதான் இந்தக் குற்றத்தை செய்தார் என்ற நம்பிக்கையாக மாறுகிறது. ஒரு குற்றத்தைச் செய்தவர் யார் என்று அடையாளம் காண முடியாதபோது, மனித மனம் இத்தகைய தந்திரத்தைச் செய்கிறது.

ஒரு வழக்கில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர் என்பதில் ஐயமில்லை. அந்தப் படுகொலைகளைச் செய்தது யார் என்பதை கண்டறிய அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட வேண்டும். ஆனால், யாரையாவது ஒருவரை எப்படியாவது குற்றவாளி என்று அறிவிப்பதன் மூலம் மட்டும் கடமை முடிந்துவிடாது. அரசுத் தரப்பு இந்தக் குற்றத்தை நிரூபிக்கத் தவறிவிட்டது. எனவே, கீழமை நீதிமன்றம் விதித்த இரட்டை ஆயுள் தண்டனை ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.

* நம்பகமான ஆதாரங்கள் இல்லாத நிலையில், குற்றத்தின் தீவிரத்தையோ அல்லது அதன் கொடூரத்தையோ கண்டு வெறும் சந்தேகத்தின் அடிப்படையில் எந்தவொரு தண்டனையும் வழங்க முடியாது.

* உண்மையான குற்றவாளியை அடையாளம் காண முடியாத விரக்தியில், நம்பகமான ஆதாரங்கள் மூலம் உண்மையை நிரூபிப்பதற்குப் பதிலாக ஒரு வழக்கைக் கட்டமைக்க முயன்றுள்ளதாகவே தெரிகிறது.

Tags : HC ,Madurai ,Solaimalai ,Soundiyamman Temple Street, Srivilliputhur, Virudhunagar district ,Saroja ,Srivilliputhur Panchayat Union Office… ,
× RELATED இறக்குமதி பருத்திக்கு வரி விதிப்பு...