ஆறுமுகமங்கலத்தில் சித்திரை திருவிழா

தேரோட்டம் ஏரல், மே 1: ஆறுமுகமங்கலம் ஆயிரத்தெண் விநாயகர் கோயில் சித்திரை திருவிழாவில் நேற்று தேரோட்டம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏரல் அருகேயுள்ள ஆறுமுகமங்கலம் ஆயிரத்தெண் விநாயகர் கோயில் மிகப் பழமையான பிரசித்திப் பெற்ற கோயிலாகும். இக்கோயிலில் சித்திரை திருவிழா, கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வந்தது. தினமும் சுவாமிக்கு சிறப்பு பூஜை, வழிபாடு மற்றும் பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி வீதியுலா வரும் நிகழ்ச்சி நடந்தது. சிகர நிகழ்வான தேரோட்டம், நேற்று முன்தினம் காலை நடைபெற்றது. முன்னதாக செவ்வாய்க்கிழமை இரவு தேர் கடாட்சம் மற்றும் தேரடி மாடசாமி சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து நேற்று முன்தினம் காலை ஆயிரத்தெண் விநாயகர் தேரில் எழுந்தருள திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. திருத்தேர் நிலைக்கு வந்தவுடன் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் ஆறுமுகமங்கலம் மற்றும் ஏரல் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் திருவிழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

Related Stories: