எங்கள் கட்சி ஒற்றுமை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை முன்னிறுத்துகிறது – பிரதமருக்கு அகிலேஷ் யாதவ் பதிலடி

லக்னோ: உத்திரபிரதேச மாநில வளர்ச்சியை சமாஜ்வாதி கட்சி தடுப்பதாக கூறிய பிரதமர் மோடிக்கு, அக்கட்சியின் தலைவரான அகிலேஷ் யாதவ் கண்டனம் தெரிவித்து உள்ளார். மக்களை ஒன்றுபடுத்தும் அரசியலையே சமாஜ்வாதி கட்சி பின்பற்றுவதாக குறிப்பிட்டு பிரதமர் மோடிக்கு, அகிலேஷ் யாதவ் பதிலடி கொடுத்து உள்ளார்.

முன்னதாக உத்திரபிரதேசம் ஹர்தோயில் 594 கி.மீ நீளமுள்ள கங்கை விரைவுச்சாலையை திறந்து வைத்த பிறகு கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, சமாஜ்வாதி கட்சி வளர்ச்சிக்கு எதிரானது மற்றும் பெண்களுக்கு எதிரானது என்று கடுமையாகச் சாடினார். நாடாளுமன்றத்தில் உத்தரபிரதேசத்தை இழிவுபடுத்திய கட்சியுடன் சமாஜ்வாதி கட்சி கைகோர்த்து கொண்டு செயல்படுவதாக கடுமையாக சாடினார். இதன் மூலம் சமாஜ்வாதி கட்சி மனைலத்தின் வளர்ச்சிக்கும், பெண்களுக்கும் எதிராக செயல்பட்டு வருகிறது என குறிப்பிட்டார்.

2029 முதல் மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு இட ஒதுக்கீட்டை முன்னெடுக்கும் 131-ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை, சமாஜ்வாதி கட்சியும் அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸும் எதிர்த்ததை பிரதமர் மோடி சுட்டிக்காட்டி பேசினார். மசோதா வெற்றிகரமாக நிறவேறினால் நாட்டில் இருக்கும் ஒவ்வொரு மாநிலத்திற்குமான நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை விகிதாசாரப்படி அதிகரிக்கும் என தெளிவுபடுத்திய பிறகும் உத்தரப் பிரதேசத்திற்கு ஏன் இடங்கள் அதிகரிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பிய எதிர்கட்சிகளுடன் சமாஜ்வாதி கைகோர்த்து நின்றது என சாடினார்.

இந்த நிலையில் சமாஜ்வாதி கட்சி வளர்ச்சிக்கு எதிரானது என்று பிரதமர் குற்றம் சாட்டியதற்குப் பதிலடியாக, தங்கள் கட்சி எப்போதும் ஒற்றுமை, அனைவரையும் அரவணைத்து செல்லும் தன்மை மற்றும் சமத்துவ வளர்ச்சியை நம்புவதாகக் கூறினார். சமாஜ்வாதி கட்சி எப்போதும் மக்களை ஒன்றிணைக்கப் பாடுபட்டுள்ளது. நாங்கள் பாகுபாடுகளை அகற்றி நல்லிணக்கத்தை வளர்ப்பதில் நம்பிக்கை கொண்டுள்ளோம். மேலும் எங்கள் கட்சி “கங்கா-யமுனி தெஹ்ஸீப்” மற்றும் “இந்துஸ்தானியத்” ஆகியவற்றிற்காக நிற்பதாகவும், சாதி, மதம் பேதமின்றி மக்களை ஒன்றிணைக்கும் அரசியலை ஆதரிப்பதாகவும் கூறி இருக்கிறார்.

கங்கை விரைவுச்சாலை திறப்பு விழாவைக் குறிப்பிட்டு, மாநிலத்தில் விரைவுச்சாலை மேம்பாட்டிற்கு சமாஜ்வாதி கட்சியே முன்னோடியாக இருந்தது. விரைவுச்சாலைகளை எப்படி அமைப்பது என்று யாராவது கற்றுக் கொடுத்திருந்தால், அது சோசலிஸ்டுகள் தான் என குறிப்பிட்டார்.

Related Stories: