கடுமையான வெப்ப அலைகள், காட்டு தீ போன்ற பல்வேறு காரணங்களால் ஐரோப்பா மிகவேகமாக வெப்பமடையும் கண்டமாக மாறி இருக்கிறது. வெப்பஅலைகள், காட்டு தீ மற்றும் காலநிலை மாற்றத்தால் சுருங்கி வரும் பனி பரப்பு போன்ற காரணங்களால் ஐரோப்பா கண்டம் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டு வருவதாக ஐநா வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் வானிலை ஆய்வு மைய அமைப்பானது ஐரோப்பிய இடைக்கால வானிலை முன்னறிவிப்பு மையத்துடன் (ECMWF) இணைந்து தயாரித்த கூட்டு அறிக்கையின் வாயிலாக, அப்பிராந்தியத்தில் நிலவும் காலநிலை மாற்றத்தின் அவல நிலையைச் சித்தரிக்கும் ஆய்வு தகவல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன.
காலநிலை மாற்றம் தொடர்பான இந்த அறிக்கையானது, ஐரோப்பா-வை ‘மிக வேகமாக வெப்பமடையும் கண்டம்’ என குறிப்பிட்டுள்ளது. 2025-ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட ஐரோப்பாவின் அனைத்து பகுதிகளும் சராசரிக்கும் அதிகமான வருடாந்திர வெப்பநிலையை எதிர்கொண்டதாக ஐநா வானிலை அமைப்பு கூறி இருக்கிறது. குறிப்பாக ஆர்க்டிக் முதல் மத்திய தரைக்கடல் வரையிலான பகுதிகளில் காட்டுத்தீயும், கடற்பகுதிகளில் இதுவரை இல்லாத அளவிலான அதிகபட்ச வெப்பநிலையும் பதிவான ஒரு ஆண்டாக இது அமைந்தது.
மேலும் இந்த பகுதி முழுவதும் நிலவிய வெப்பமான மற்றும் வறண்ட சூழல்கள், கடந்த ஆண்டு 10 லட்சம் ஹெக்டேருக்கும் (25 லட்சம் ஏக்கர்) அதிகமான நிலத்தை எரித்து நாசமாக்கிய காட்டுத்தீயைத் தூண்ட காரணமாக அமைந்தது. மேலும் ஐரோப்பிய ஆறுகளில் சுமார் 70 சதவீதம் சராசரிக்கும் குறைவான வருடாந்திர நீரோட்டத்தை பதிவு செய்துள்ளதாகவும் அறிக்கை கூறுகிறது. இதன் வீரியத்தை உணர வேண்டுமானால் ஐரோப்பாவின் மிகக் குளிரான பிராந்தியங்களிலேயே மிக முக்கியமான காலநிலை மாற்றங்கள் ஏற்பட்டதை சொல்லலாம்.
துணை-ஆர்க்டிக் மண்டலத்தைச் சேர்ந்த நார்வே, ஸ்வீடன் மற்றும் பின்லாந்து போன்ற நாடுகள் கூட கடந்த ஜூலை 2025-ல் சுமார் 21 நாட்கள் நீடித்த ஒரு கடும் வெப்ப அலையை சந்தித்தன. இந்த நாடுகள் தங்கள் வரலாற்றிலேயே மிக மோசமான வெப்ப அலையை இந்த காலகட்டத்தில் பதிவு செய்தது. 1980-களிலிருந்து உலக சராசரி விகிதத்தை விட இரண்டு மடங்கிற்கும் அதிகமான வேகத்தில் ஐரோப்பிய கண்டம் வெப்பமடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
