புதுடெல்லி: இந்தியா மற்றும் இலங்கை கடற்படைகள் இடையேயான ஆழ்கடல் நீர்மூழ்கி பயிற்சி கொழும்புவில் நடந்தது. இதில் இரு நாட்டு வீரர்களும் கலந்து கொண்டனர். இந்தியா-இலங்கை கடற்படைகளுக்கு இடையே டைவெக்ஸ் என்ற இரு தரப்பு ஆழ்கடல் நீர்மூழ்கி பயற்சி நடந்தது. கொழும்பு கடலோரத்தில் கடந்த 21ம் தேதி தொடங்கிய பயிற்சி 28ம் தேதி வரை நடந்தன. இருதரப்பு கடற்படைப் பயிற்சியின் ஒரு பகுதியாக, இந்தியா மற்றும் இலங்கை கடற்படை வீரர்கள் ஆழ்கடலில் மூழ்கி, நீருக்கடியில் தேடுதல், மீட்பு நடவடிக்கைகளில் கூட்டுத் திறன்களை மேம்படுத்தினர் என்று அதிகாரிகள்
நேற்று தெரிவித்தனர். இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் நிரிஷக் என்ற கப்பல், பயிற்சித் திட்டத்திற்காக 21ம் தேதி அன்று இலங்கைக்கு வந்தது. பயிற்சியை நிறைவுசெய்தபின்28 ம் தேதி தீவிலிருந்து கப்பல் புறப்பட்டது. இலங்கை கடற்படையினர், கொழும்பு துறைமுகத்தில் நிரிஷக் கப்பலுக்கு பிரியாவிடை அளித்தனர். மேலும், இரு நாடுகளின் கடற்படைகளுக்கு இடையே நட்பையும் ஒத்துழைப்பையும் மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட யோகா நிகழ்ச்சி, கைப்பந்துப் போட்டி மற்றும் கடற்கரை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சி ஆகியவற்றில் கப்பலின் குழுவினர் பங்கேற்றனர். நாட்டில் உள்ள கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த பல இடங்களையும் அவர்கள் பார்வையிட்டனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
