மனித புதைகுழிகள் செம்மணி அகழாய்வு பணிகளை மீண்டும் தொடங்க வேண்டும்: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

கொழும்பு: இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் கடந்த 1990ம் ஆண்டு நடந்த விடுதலை புலிகள் போராட்டத்துக்கு பிறகு, யாழ்ப்பாணத்தில் ஏராளமானோர் மாயமாகினர். இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், கடந்த 2025ம் ஆண்டு பிப்ரவரி 13ம் தேதி, யாழ்ப்பாணத்தின் புறநகர்ப் பகுதியான செம்மணியில் மேற்கொள்ளப்பட்ட மேம்பாட்டுகளின்போது நடந்த அகழாய்வில் மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டு, அதிலிருந்து 240 எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. அத்துடன், 14 குவியல் எலும்புகள், பச்சிளம் குழந்தைகளுக்கான உணவு பாட்டில்கள், பொம்மைகள், குழந்தைகளுக்கான பைகள், காலணிகள் போன்ற பொருள்களும் தோண்டி எடுக்கப்பட்டன.

இதையடுத்து அந்த உடல்களை தோண்டி எடுத்து, டிஎன்ஏ பரிசோதனை மூலம் மீட்கப்பட்டவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணி மேற்கொள்ளப்பட்டது. பின்னர் இலங்கை நீதியமைச்சகத்தின் நிதிபற்றாக்குறையால் இந்த பணிகள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நிறுத்தப்பட்டன. இந்நிலையில் செம்மணியில் மனித புதைகுழிகளை அகழாய்வு செய்யும் பணிகளை மீண்டும் தொடங்க இலங்கை நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இந்த அகழாய்வு பணிகளின்போது, ஐரோப்பிய ஒன்றியம், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி மற்றும் ருமேனியா ஆகிய நாடுகளின் தூதரக பிரதிநிதிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபடவும் நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.

Related Stories: