திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் தற்போது கடுமையான கோடை வெப்பம் நிலவுவதால் மின்நுகர்வு அதிகரித்துள்ளது. இதனால் உற்பத்தி பாதிக்கப்பட்டு பல மாவட்டங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அறிவிக்கப்படாத மின்வெட்டை கண்டித்து திருச்சூர், கோழிக்கோடு, கொல்லம் உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு அமைப்புகள் சார்பில் நேற்று போராட்டம் நடத்தப்பட்டது. திருச்சூர் மாவட்டத்தில் உள்ள கேரள மாநில மின்சார வாரியத்தின் குண்டனூர் பிரிவு அலுவலகத்துக்கு நேற்று முன்தினம் நள்ளிரவில் பேரணியாக சென்ற மக்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மின் விநியோக முக்கிய பாதையில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாகவே மின்வெட்டு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். அதை ஏற்க மறுத்த பொதுமக்கள் நேற்று அதிகாலை வரை அங்கேயே அமர்ந்தும், படுத்தும் பிரச்னைக்கு தீர்வு கோரி கோஷங்களை எழுப்பினர். கோழிக்கோட்டில் இளைஞர் கழகத்தினர் பன்னியங்கரா மின்வாரிய அலுவலகத்தில் போராட்டம் நடத்தினர். இதேபோல், நாதாபுரம் துணை மின்நிலையத்தில் மெழுகுவர்த்திகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மலப்புரத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்திலும் இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
