பெங்களூரு: பெங்களூருவில் நேற்று மாலை பலத்த சூறைக்காற்றுடன் பெய்த கனமழைக்கு, சிவாஜி நகரில் உள்ள அரசு பவுரிங் மருத்துவமனை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பெங்களூருவில் நேற்று மாலை பலத்த சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. திடீர் மழையால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர். அலுவலகம் முடிந்து வீடு திரும்பும் உச்ச நேரத்தில் ஆலங்கட்டி மழை பெய்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 50க்கும் மேற்பட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான மரங்கள் முறிந்து விழுந்ததில் ஏராளமான வாகனங்கள் சேதமடைந்தன.
இந்நிலையில் பெங்களூரு சிவாஜிநகரில் உள்ள அரசு பவுரிங் மருத்துவமனையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 2 குழந்தைகள் உள்பட நடைபாதை வியாபாரிகள் 7 பேர் உயிரிழந்தனர். அவசர சிகிச்சை பிரிவுக்கு அருகே இருந்த சுவர் இடிந்து விழுந்த போது அதன் கீழ் அமர்ந்து வியாபாரம் செய்து வந்தவர்கள் சிக்கிக்கொண்டுள்ளனர். இதில் சிக்கிக்கொண்ட மற்ற சிலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு இருந்த மக்கள் துரிதமாக செயல்பட்டதால் சிலரை உயிருடன் மீட்க முடிந்தது.
தகவலறிந்து உடனடியாக பவுரிங் மருத்துவமனைக்கு சென்ற முதல்வர் சித்தராமையா, சம்பவம் குறித்து நேரில் விசாரணை நடத்தினார். மாநகராட்சி அதிகாரிகளை முதல்வர் கண்டித்தார். காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக எடுத்திருந்தால் இத்தகைய பேரழிவு ஏற்பட்டிருக்குமா என்று அதிகாரிகளை மிகக்கடுமையாக கண்டித்த முதல்வர் சித்தராமையா, உயிரிழந்த 7 பேர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்தார். காயத்துடன் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிறப்பு உயர்தர சிகிச்சை அளிக்குமாறு அறிவுறுத்தினார்.
