புதுடெல்லி: கச்சா எண்ணெய் விலை உயர்வால் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.14, டீசல் ரூ.18 இழப்பு ஏற்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ஈரான் போரை தொடர்ந்து உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதால் ஏராளமான எண்ணெய் கப்பல்கள் அங்கு தேங்கி உள்ளன. மேலும் இயல்பான சரக்கு போக்குவரத்து நடைபெற முடியவில்லை. இதனால் இந்தியாவில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்பு மேற்கு ஆசிய போர் ஏற்படுவதற்கு முன்னர், கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு சுமார் 70-72 அமெரிக்க டாலராக இருந்தது.
தற்போது 120 டாலராக உயர்ந்து விட்டது. இதனால் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோலை லிட்டர் ரூ.14க்கும், டீசலை லிட்டர் ரூ.18க்கும் நஷ்டத்தில் விற்பனை செய்வதாக தெரிவித்துள்ளன. மேலும் நடப்பு நிதியாண்டில் சமையல் எரிவாயுவான எல்பிஜி-யில் நிறுவனங்களுக்கு ரூ.80,000 கோடி அளவுக்குக் குறைவான வருவாயை ஏற்படுத்தக்கூடும். அதே நேரத்தில், உர மானியம் ரூ.2.05 முதல் 2.25 லட்சம் கோடி வரை உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. உர மானியச் சுமையானது, பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட ரூ.1.71 லட்சம் கோடியை விட அதிகமாக, ரூ.2.05-2.25 லட்சம் கோடியாக உயரும் என்றும் ஐக்ரா மதிப்பிடுகிறது.
