விசாகப்பட்டினத்தில் கட்டுமானத்தில் இருந்த ரயில்வே மேம்பாலம் இடிந்து விழுந்தது: 7 தொழிலாளர்கள் படுகாயம்

திருமலை: விசாகப்பட்டினத்தில் கட்டுமானத்தில் இருந்த ரயில்வே மேம்பாலம் இடிந்து விழுந்ததில் 7 பேர் படுகாயமடைந்தனர். ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டம், கஜுவாக்கா அருகே உள்ள துங்கலம் பகுதியில் ரயில்வே மேம்பால கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று மூன்றாவது மற்றும் நான்காவது தூண்களுக்கு இடையில் காற்றோட்டக் குழாய் அமைக்கும் பணி நடந்துகொண்டிருந்தபோது திடீரென பாலத்தின் கட்டுமானம் இடிந்து விழுந்தது.

விபத்து நடந்த நேரத்தில் சுமார் 10 தொழிலாளர்கள் அங்கு வேலை செய்துகொண்டிருந்த நிலையில், இடுபாடுகளில் சிக்கி 7 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசாரும், மீட்புக் குழுவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், தொழிலாளர்கள் மதிய உணவு இடைவேளைக்குச் சென்றிருந்ததால், பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கட்டுமானக் குறைபாடுகளால் விபத்து ஏற்பட்டதா? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: