புதுடெல்லி: கல்பாக்கத்தில் மாதிரி ஈனுலை முதற்கட்ட தொடர் அணுப்பிளவு நிலையை அடைந்து வரலாற்று சாதனை படைத்திருப்பதாக பிரதமர் மோடி பாராட்டினார். தமிழ்நாட்டின் கல்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள 500 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட மாதிரி வேக ஈனுலை கடந்த 6ம் தேதி அணுக்கரு பிளவு செயல்பாட்டை தாமாகவே தொடர்ச்சியாக மேற்கொள்ளும் நிலையை எட்டியது. இது அணு உலை பாதுகாப்பாக மின் உற்பத்தியை தொடங்கத் தயாராக இருப்பதை குறிக்கிறது.
இது குறித்து, பிரதமர் மோடி நேற்று தனது மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான மன் கி பாத்தில் பேசியதாவது: நமது அணு விஞ்ஞானிகள் மாபெரும் சாதனையின் மூலம் இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளனர். தமிழ்நாட்டின் கல்பாக்கத்தில் உள்ள வேக ஈனுலை தொடர் அணுப்பிளவு நிலையை எட்டி உள்ளது. இது இந்தியாவின் அணுசக்தி பயணத்தின் வரலாற்று சிறப்புமிக்க மைல்கல். இந்த அணு உலை முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளது என்பதே குறிப்பிடத்தக்க விஷயம்.
இந்தியாவின் அணுசக்தி திட்டத்திற்கு விலைமதிப்பற்ற பங்களிப்புகளைச் செய்த அனைவருக்கும் வாழ்த்து தெரிவிக்கிறேன். சக குடிமக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும் எளிதாக்கவும் விஞ்ஞானிகள் மேற்கொள்ளும் முயற்சிகள் உண்மையிலேயே பாராட்டத்தக்கவை. இதே போல காற்றாலை மின் உற்பத்தியிலும் இந்தியா முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது.
இந்தியாவின் காற்றாலை மின் உற்பத்தி திறன் இப்போது 56 ஜிகாவாட்டை தாண்டிவிட்டது. கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் 6 ஜிகாவாட் அளவிலான மின் உற்பத்தி கூடுதலாக சேர்க்ப்பட்டுள்ளது. இந்தியாவின் வளர்ச்சிக்கு சூரிய ஒளி மின் உற்பத்தியும், காற்றாலை மின் உற்பத்தியும் இன்றியமையாதவை. இது வெறும் சுற்றுச்சூழலை பற்றிய விஷயம் மட்டுமல்ல. நமது எதிர்காலத்தை பாதுகாப்பது பற்றியதும்கூட. இதில் நாம் அனைவரும் பங்காற்ற வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
