“அறம் கூறும் அரங்கங்கள்’’ என்று நீதிமன்றங்களை அழைக்கவேண்டும்: உச்சநீதிமன்ற நீதிபதி பேச்சு

 

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் 140 ஆண்டுகள் பழமையான மன்னராட்சி காலத்தில் கட்டப்பட்டு தற்போது ரூ.15 கோடியில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த கட்டிடத்தை திறந்து வைத்து உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் பேசியதாவது: வழக்காடு மன்றங்கள் என நீதிமன்றங்களை அழைப்பதில் எனக்கு ஒவ்வாமை இருக்கிறது. ‘அறம் கூறும் அரங்கங்கள்’ என்று நீதிமன்றங்களை அழைக்கவேண்டும். நம் முன் வரும் வழக்குகளை ஒரு கருத்துடன் அணுகாமல், நடுநிலையுடன் பார்க்கவேண்டும். சாதாரண மனிதனுக்கும் மேலாக முழுமையாகவும் கவனத்துடனும் வாதங்களை கவனிக்கவேண்டும். இறந்த காலமும் நிகழ்காலமும் தான் எதிர்காலத்தைக் காட்டும். இங்குள்ள கட்டிடத்தை போல் தமிழகத்தில் வேறு எங்கும் இருப்பதாக தெரியவில்லை. இவ்வாறு பேசினார்.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுசுருத் அரவிந்த் தர்மாதிகாரி பேசியதாவது: வழக்கறிஞர்களின் இன்னொரு வீடு தான் நீதிமன்றங்கள். பாரம்பரியமான சின்னமாக விளங்கும் இதுபோன்ற கட்டிடங்கள் அரசியலமைப்பு சட்டத்தின் உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்காக பயன்பட வேண்டும். நம்மை நாடிவரும் வழக்காடிகளுக்கு விரைவான நீதியைப் பெற்றுத் தரவேண்டும். அதற்காக நீதித்துறை அலுவலர்களும் வழக்கறிஞர்களும் தங்களின் பணிகளை செம்மையாகச் செய்ய வேண்டும். இவ்வாறு கூறினார்.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் பேசுகையில், ‘’ஏராளமான இளம் வழக்கறிஞர்கள் இப்போது முதன்மையான தொழிலாகக்கொண்டு நீதித்துறைக்குள் வந்திருக்கிறார்கள். எல்லாத் தரப்பிலும் துறையிலும் திறமை பெற்றிருந்தால்தான் சமுதாயத்தின் சிற்பிகளாக வழக்குரைஞர்கள் ஆக முடியும். அப்போதுதான் புகழும், அந்தஸ்தும் தேடிவரும்’’ என்றார். இந்த நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அருள்முருகன், புதுக்கோட்டை வழக்கறிஞர்கள் சங்க தலைவர் முத்தையன், செயலாளர் ரமேஷ், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் மணிவண்ணன் கலந்து கொண்டனர். மாவட்ட முதன்மை மற்றும் செசன்ஸ் நீதிபதி பூர்ண ஜெய ஆனந்த் வரவேற்றார். தலைமை நீதித்துறை நீதிபதி பால்பாண்டியன் நன்றி கூறினார்.

 

Related Stories: