பழ மார்க்கெட் ஆக்கிரமிப்பு 6 வாரத்தில் அகற்றப்படும் ஐகோர்ட் கிளையில் மாநகராட்சி தகவல்

மதுரை, ஏப். 25: மாட்டுத்தாவணி பழ மார்க்கெட் ஆக்கிரமிப்பு 6 வாரத்தில் அகற்றப் படும் என ஐகோர்ட் கிளையில் தெரிவிக்கப்பட்டது. மதுரை பழ கமிஷன் ஏஜெண்டுகள் சங்க தலைவர் ராஜேந்திரன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மாட்டுத்தாவணி பழ மார்க்கெட் பகுதியில் சட்ட விரோதமான ஆக்கிரமிப்புகள் அதிக அளவில் உள்ளன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இது வியாபாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் பெரும் இடையூறாக உள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்ற மதுரை மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி சதிஷ்குமார், ஜோதிராமன் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. இதில், மாநகராட்சி வழக்கறிஞர் விநாயக் ஆஜராகி, 6 வாரங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்றார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மனுவை முடித்து வைத்தனர்.

 

Related Stories: