ஓசூர் அருகே இன்று அதிகாலை கார்- தனியார் சொகுசு பஸ் மோதல்; 3 வாலிபர்கள் உடல் நசுங்கி பலி: பெங்களூரில் இருந்து பென்னாகரத்திற்கு வாக்களிக்க வந்தபோது பரிதாபம்

​ஓசூர்: ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் இன்று அதிகாலை காரும் பஸ்சும் மோதிய விபத்தில், 3 வாலிபர்கள் உயிரிழந்தனர். நாளை நடக்கும் தேர்தலில் வாக்களிக்க பெங்களூரில் இருந்து வந்தபோது இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. இது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வீரமணி (25) என்பவர் சிப்ஸ் கடை நடத்தி வருகிறார். இவரது சொந்த ஊர் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த சிகலஹள்ளி கிராமம். இவரது கடையில் பென்னாகரம் பாளையம் புதூரை சேர்ந்த அண்ணன், தம்பிகளான மாரி (35), பிரதீப்குமார் (30) மற்றும் கடைமடை பகுதியை சேர்ந்த சதீஷ்குமார்(25) ஆகியோர் பணியாற்றி வந்தனர்.

நாளை (வியாழக்கிழமை) தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி உறவினர்களான இவர்கள், 4 பேரும் வாக்களிப்பதற்காக சொந்த ஊரான பென்னாகரத்திற்கு இன்று அதிகாலை காரில் புறப்பட்டனர். அதிகாலை 4 மணியளவில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதி வழியாக காரில் வந்தனர். அப்போது, உடுமலைபேட்டையில் இருந்து ஓசூர் நோக்கி வந்த தனியார் சொகுசு பஸ்சும், காரும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.​ இதில் கார் நொறுங்கியது. பஸ்சின் முன்பகுதியிலும் சேதம் ஏற்பட்டது. பஸ்சில் 13 பேர் பயணம் செய்தனர். விபத்தை பார்த்த அவ்வழியாக சென்றவர்கள் உடனடியாக உத்தனப்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, காரில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். இதில், வீரமணி,​ பிரதீப் குமார்,​ மாரி ஆகிய 3 பேரும் உயிரிழந்திருப்பது தெரிந்தது. சதீஷ்குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. உடனே அவரை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்த மற்ற 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பஸ்சில் வந்தவர்கள் காயங்களின்றி உயிர் தப்பினர். விபத்தில் உயிரிழந்த மாரிக்கு திருமணமாகி ஒரு குழந்தை இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சொந்த ஊருக்கு வாக்களிக்க வந்தபோது விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: