ஜெயங்கொண்டத்தில் அமோக விற்பனை கோடையில் சூடு தணிக்கும் நுங்கு, இளநீர்

*பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்தது

ஜெயங்கொண்டம் : ஜெயங்கொண்டம் பகுதிகளில் நுங்கு, இளநீர் விற்பனை படுஜோராக நடைபெற்று வரும் நிலையில், பொதுமக்கள் அதனை ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

கோடைக்காலத்தில் உடலுக்கு குளிர்ச்சி தந்து நம் ஆரோக்கியத்திற்கு நன்மை தருவது நுங்குதான். எங்கும் எளிமையாக, சுவையாக இருக்கும் நுங்கு பலவித மருத்துவ பண்புகளையும் கொண்டுள்ளது.

நுங்கில் வைட்டமின் சி,பி, இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகம், சோடியம், மக்னீசியம், பொட்டாசியம் தயாமின், அஸ்பாரிக் அமிலம் மற்றும் புரதம் போன்ற பல்வேறு சத்துக்கள் அடங்கியுள்ளன.கோடைக்கால வெயிலின் தாக்கத்தில் உடல் சோர்வடைவதை தடுக்கிறது.உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது.

நாவரட்சி, தாகத்தை போக்கி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. கொழுப்பை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்க உதவுகிறது. வயிற்று போக்கு, மலச்சிக்கல் போன்ற பிரச்னைகளுக்கு நல்ல தீர்வைத் தருகிறது. ரத்த சோகையை போக்கி, உடல் சுறுசுறுப்பை மேம்படுத்துகிறது. நுங்கில் உள்ள ஆந்த்யூசைன் என்ற ரசாயனப்பொருள் பெண்களுக்கு வரும் மார்பக புற்றுநோய் வராமல் பாதுகாக்கிறது.

கோடையில் ஏற்படும் அம்மை, அக்கி, தோல் நோய்களுக்கு தடுப்பானாக உடலை பாதுகாக்கிறது. இளநீர், நுங்கை அடிக்கடி சேர்த்துக்கொள்ள உடல் பொலிவு அடைவதோடு சொரி, சிரங்கு போன்ற சரும பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்க வல்லது. வியர்க்குரு, வேனல் கட்டி ஏற்பட்டால் நுங்கை அதில் உள்ள நீரோடு அரைத்து சந்தனம் கலந்து பூசி வர நல்ல குணம் கிடைக்கும்.

நுங்கை தோலுடன் சாப்பிட அதன் முழு சத்துக்களும் கிடைக்கும். களைப்பைபோக்கி, புத்துணர்வுபெற நுங்கு சர்பத், நுங்கு கீர் சாப்பிடலாம். உடல் எரிச்சலை போக்கி கண்சிவத்தலை சரி செய்கிறது.

இந்நிலையில், இவ்வளவு மருத்துவ குணங்கள் நிறைந்த நுங்கு ஜெயங்கொண்டம் பகுதிகளில் அமோக விற்பனையாகி வருகிறது. பொதுமக்களும் கோடை வெப்பத்தை தணிக்க அதனை ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

Related Stories: