திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலில், சித்திரை பெருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். 11 நாட்கள் நடைபெற உள்ள விழாவில் வரும் 29ம் தேதி அதிகாலை தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. முருகப்பெருமானின் 5ம் படை வீடாக போற்றப்படும் திருத்தணி முருகன் கோயில் சித்திரை பெருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று மாலை அங்குரார்ப்பணம் நடைபெற்றது.
இன்று அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் மற்றும் அலங்காரம் மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து கொடிமரம் அலங்கரிக்கப்பட்டு கோயில் அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது. கொடிமரம் எதிரில் வள்ளி, தெய்வானை சமேத உற்சவர் எழுந்தருளி அருள்பாலிக்க கொடியேற்றத்துடன் சித்திரை பெருவிழா தொடங்கியது. இதில் கோயில் அறங்காவலர் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இந்த சித்திரை பெருவிழா நடைபெறும் 11 நாட்களும் காலை மற்றும் மாலை நேரங்களில் உற்சவர் முருகப்பெருமான் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி கோயில் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் பவனி வரும் 27ம் தேதி நடக்கிறது. மற்றொரு முக்கிய விழாவான தெய்வானை திருக்கல்யாணம் 29ம் தேதி அதிகாலை நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது.
அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோயில் மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் ஆட்சிஸ்வரர் கோயில் சித்திரை பெருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. சூரியபிறை, அதிகார நந்தி, திருமுல்லைப்பால் உற்சவம், 63 நாயன்மார்கள் உற்சவம், அன்னவாகனம், யாழிவாகனம், சிம்ம வாகனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் 13ம் தேதி வரை நடைபெறுகிறது. 14ம் தேதி தேர் திருவிழா நடக்கிறது. தொட்டி உற்சவம், தீர்த்தவாரி, அகஸ்தியருக்கு காட்சி கொடுத்தல், விடையாற்றி உற்சவம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் கோலாகலமாக நடைபெற உள்ளது.
