மொடக்குறிச்சி: மொடக்குறிச்சி அருகே உரிய ஆவணங்கள் இன்றி காரில் பாஜ வேட்பாளரின் உறவினர் கொண்டு வந்த ரூ.89.83 லட்சத்தை பறிமுதல் செய்த பறக்கும்படை அதிகாரிகள் அவற்றை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மொடக்குறிச்சி அருகே உள்ள செலப்பகவுண்டன்பாளையத்தில் காரில் பணம் இருப்பதாக பறக்கும்படை அதிகாரிகளுக்கு நேற்று நள்ளிரவு 11.30 மணிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன்பேரில் அங்கு சென்ற அதிகாரிகள் அப்பகுதியில் நின்று கொண்டிருந்த காரை சோதனை செய்தனர். இதில் மொடக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட ஆனந்தம்பாளையத்தை சேர்ந்த அரவிந்தன் (45) என்பவர் எந்தவித ஆவணங்களும் இல்லாமல் ரூ.89 லட்சத்து 83 ஆயிரம் ரொக்கம் வைத்திருந்தது தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில், அவர், எந்தவித தகவலும் கூறவில்லை என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இருப்பினும் அதற்குரிய ஆவணங்கள் இல்லாததால் பணம் மற்றும் காரை பறிமுதல் செய்த அதிகாரிகள் மொடக்குறிச்சி தேர்தல் நடத்தும் அலுவலர் தியாகராஜன் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவசங்கர் ஆகியோரிடம் ஒப்படைத்தனர். ரூ.10 லட்சம் வரை பணத்தை பறிமுதல் செய்ய தேர்தல் அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அதற்கு மேல் பிடிபடும் பணத்தை வருவாய்த்துறையினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற அடிப்படையில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.89 லட்சத்து 83 ஆயிரத்தை ஈரோடு வருமான வரித்துறை அதிகாரிகளிடம் தேர்தல் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நிலையில் ரூ.89.83 லட்சம் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய எடுத்து செல்லப்பட்டதா? அல்லது தொழில் ரீதியாக கொண்டு சென்ற பணமா என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே பணத்தை கொண்டு வந்த அரவிந்தன் மொடக்குறிச்சி பாஜ வேட்பாளர் கிருத்திகாவின் உறவினர் எனபது குறிப்பிடத்தக்கது.
