மதுரை, ஏப். 21: மதுரை, புறநகர் பகுதியை சேர்ந்த 32 வயது பெண் ஒருவர், ஊமச்சிகுளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில், எனது உறவினரான அசோக்குமார்(33) என்பவர், போலீஸ்காரராக வேலை செய்து வருகிறார். அவர் 2016ல் தூத்துக்குடியில் பணிபுரிந்தபோது, அங்கு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். பின்னர், பல்வேறு காரணங்களால் அந்த பெண்ணிடம் இருந்து சட்டப்படி விவாகரத்து பெற்றார்.
இதற்கிடையே, என்னிடம் பேசிய அவர் என்னை திருமணம் செய்துகொள்வதாக உறுதியளித்தார். இதனை நம்பி நான் அவருடன் பழகி வந்தேன். பின்னர் எங்களுக்கு நிச்சயதார்த்தமும் நடைபெற்றது. இந்நிலையில் அவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு, என்னை ஏமாற்றி விட்டார். எனவே, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கூறப்பட்டிருந்தது. இந்த புகார் தொடர்பாக ஊமச்சிகுளம் போலீசார் விசாரணை நடத்தினர். இதனைத்தொடர்ந்து போலீஸ்காரர் அசோக்குமார் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
