*பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு பாராட்டு
கரூர் : கரூர் மாவட்டத்தில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கிராமப்புறங்களில் 3.60 லட்சம் மரக்கன்று வளர்த்து பசுமை புரட்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது.மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (MGNREGA) மூலம் கிராமப்புற குடும்பங்களுக்கு நிதியாண்டிற்கு 100 நாட்கள் திறன் சாரா உடல் உழைப்பு வேலை வழங்கப்படுகிறது. ஏரி, கால்வாய் தூர்வாருதல், சாலை அமைத்தல், மரம் நடுதல் மற்றும் நீர் சேமிப்பு போன்ற பணிகள் மூலம் ஊரக மக்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படுகிறது.
நீர் மேலாண்மை மற்றும் பாதுகாப்பு: நீர்நிலைகளைத் தூர்வாருதல், ஏரி, குளம், கால்வாய் மற்றும் ஊரணிகளைப் பராமரித்தல். நில மேம்பாடு: தரிசு நிலங்களை விவசாய நிலங்களாக மாற்றுதல், நிலச் சீரமைப்புப் பணிகள், மரம் நடுதல் மற்றும் காடுகள் வளர்ப்பு:
சாலையோரங்களில் மரம் நடுதல், நர்சரி பராமரிப்பு, சாலை அமைத்தல் கிராமப்புறங்களில் மண் சாலைகள் அமைத்தல் மற்றும் பராமரித்தல்.நீர் சேமிப்பு பணிகள் தடுப்பணைகள் (Check Dams) கட்டுதல் மற்றும் வெள்ளத் தடுப்புப் பணிகள். மற்றும் பிற பணிகள் பள்ளி மற்றும் கோவில் வளாகங்களைச் சுத்தப்படுத்துதல், பொது இடங்களைப் பராமரித்தல்.
18 வயதிற்கு மேற்பட்ட ஊரக மக்கள் விண்ணப்பிக்கலாம். வேலை கேட்டு விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் வேலை வழங்கப்பட வேண்டும். சம்பளம் நேரடியாக வங்கி அல்லது அஞ்சலக கணக்கில் செலுத்தப்படுகிறது. இந்தத் திட்டம் தற்போது ‘பூஜ்ய பாபு கிராமீன் ரோஜ்கார் கேரண்டி பில் 2025’ என மாற்றப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் வரலாறு இவ்வாறு இருந்த போதிலும் கரூர் மாவட்டத்தில் கலெக்டர் ரவிகுமார் உத்தரவின் அடிப்படையில் முழுவதும் பயனுள்ள வகையில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் டாக்டர் வீரபத்திரன் மேற்பார்வையில் மாவட்டத்தில் உள்ள 153 ஊராட்சிகளில் கிராம சாலைகள், நீர் நிலைகளின் இருபுறங்கள், குளம் குட்டைகள், ஆற்று படுகைகள் மற்றும் அரசுக்கு சொந்தமான மானாவாரி இடங்களில் மாவட்டத்தில் உள்ள கரூர் தான்தோன்றி, அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், கே. பரமத்தி, குளித்தலை, கடவூர், தோகைமலை ஆகிய எட்டு ஒன்றியங்களில் சுமார் 88 ஆயிரத்துக்கு அதிகமான 100 நாள் பணியாளர்களைக் கொண்டு 3.60 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
தற்போது மரக்கன்று நடும் போது நவீன முறையை கடைப்பிடித்து சுமார் 3 முதல் 4 அடி வரை குழி எடுத்து இரண்டு அடி உயரத்திற்கு வறட்சி தாங்கும் அளவிற்கு தென்னை மரத்து நார் மற்றும் நீரை உறிஞ்சி வைக்கும் புல் வகைகளை குழியில் நிரப்பி ஏற்கனவே பண்ணையில் நான்கு முதல் 5 அடி வரை வளர்ந்த மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு செய்யப்பட்டு 100 நாள் பணியாளர்கள் கொண்டு முறையாக வாரத்திற்கு மூன்று முதல் நான்கு நாட்கள் தண்ணீர் பாய்ச்சி பராமரிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக தாந்தோணி ஒன்றியத்துக்கு உட்பட்ட மூக்கணாங்குறிச்சி, புத்தாம்பூர், கருப்பம்பாளையம், வெள்ளியணை, ஏமூர், ஜெகதாபி, மேலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கிராம சாலைகளில் வேம்பு, மகிழம்பூ, புங்க மரம், பூவரசு, ஆலமரம் உள்ளிட்ட மரக்கன்று நட்டு தற்போது அனைத்து மரக்கன்றுகளும் பராமரிக்கப்பட்டு வளர்ந்துள்ளன. ஆண்டுகளை கால்நடைகள் சேதப்படுத்திடாத அளவிற்கு மரக்கன்றுகளை சுற்றி பாதுகாப்பு கவசமாக பிளாஸ்டிக் கவரும் மூலம் அமைக்கப்பட்டுள்ளது.
3 லட்சத்து 60 ஆயிரம் மரக்கன்றுகளில் அனைத்து மரக் கன்றுகளும் சிறப்பாக வளர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இன்னும் ஐந்து முதல் ஏழு ஆண்டுகளுக்குள் அனைத்து மரங்களும் வளர்ந்து கரூர் மாவட்டத்தில் இனி வரும் காலங்களில் பருவ மழை அதிகமாக பெய்யும் என்பதில் ஐயமில்லை. சிறப்பாக பணி செய்யும் மாவட்ட நிர்வாகத்துக்கு பாராட்டுக்கள் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
