விருதுநகரில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா 5 லட்சம் நிவாரணம்: ஆட்சியர் அறிவிப்பு

 

விருதுநகர்: விருதுநகரில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என ஆட்சியர் அறிவித்துள்ளார். விருதுநகர் அருகே உள்ள கோவிந்தநல்லூரைச் சேர்ந்தவர் முத்துமாணிக்கம் (52). இவருக்கு சொந்தமான வனஜா பட்டாசு ஆலை வி.முத்துலிங்காபுரம் ஊராட்சி கட்டனார்பட்டியில் அமைந்துள்ளது. இந்த ஆலையில், பிற்பகல் 3.10 மணியளவில், பட்டாசு மூலப்பொருட்கள் அறையில் மருந்து உராய்வால் வெடிவிபத்து ஏற்பட்டு அந்த அறை இடிந்து தரைமட்டமாகியது. இதனைத் தொடர்ந்து மேலும் 3 அறைகளுக்கு தீ பரவி, அவைகளும் இடிந்து தரைமட்டமாகின. 4 அறைகளிலும் தொழிலாளர்கள் இருந்தனர்.

தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். பின்னர் 23 பேரை சடலங்களாக மீட்டனர். 6 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டனர். 6 பேரையும் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வெடி விபத்து நடந்த பகுதியில், கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை ஜேசிபி இயந்திரம் மூலம் மீட்கும் பணி நேற்று இரவு நடந்து கொண்டிருந்தது. அப்போது கட்டிட இடுபாடுகளின் அடியில் சிக்கி இருந்த பட்டாசுகள் எதிர்பாராதவிதமாக திடீரென வெடித்து சிதறியதில் பெரிய தீப்பிழம்பு ஏற்பட்டது. அதில் இருந்து, கற்கள் வெடித்து நாலாபுறமும் சிதறின. இதனால் அங்கிருந்த தீயணைப்பு வீரர்கள், போலீசார் உட்பட 12 பேர் காயமடைந்தனர்.

இந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சேவைக்காரன்பட்டியை சேர்ந்த பேச்சியம்மாள் (51), திருத்தங்கல்லைச் சேர்ந்த பஞ்சவர்ணம் (56) ஆகியோர் இன்று அதிகாலை உயிரிழந்தனர். இதையடுத்து பலி எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. வெடி விபத்தில் சேர்வைக்காரன்பட்டி கிராமத்தை சேர்ந்த 17 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. மூன்று பெண்கள் ஒரு ஆண் உட்பட நான்கு பேரில் சடலங்கள் இன்னும் அடையாளம் காணப்பட முடியவில்லை. இதுகுறித்து பட்டாசு ஆலை உரிமையாளர் ஈஸ்வரி அவரது கணவர் முத்துமாணிக்கம் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிந்து, அவர்களை தேடி வருகின்றனர்.

இதனிடையே உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகை வழங்குவது தொடர்பாக தேர்தல் ஆணையத்தால் கோவிந்தராவ் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், நேற்று நள்ளிரவு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு வந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், காயம்பட்டவர்களிடம் விபத்து குறித்து கேட்டறிந்தார். போலீசார் கூறுகையில், ‘வெடிபொருட்கள் கலவைகளை கொஞ்சம், கொஞ்சமாக எடுத்துச் சென்று பட்டாசு தயாரிக்க வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால், அதிகப்படியான வெடிபொருள்கள் கலவைகளை மருந்து கலக்கும் அறைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

இதனால், விபத்து ஏற்பட்டு 25 பேர் வரை உயிரிழந்துள்ளனர்’ என்றனர். இதனிடையே, பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குவிந்துள்ளனர். பட்டாசு ஆலை நிர்வாகம் தரப்பில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா 5 லட்சம், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சம், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

மேலும் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர்களை தேடி வருகிறோம் எனவும் வெடி விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலையை முறையாக கண்காணிக்காத அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Related Stories: