திருச்சி: திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜை ஆதரித்து திருச்சி பாலக்கரை கீழப்புதூரில் உள்ள டீக்கடை முன் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வி சேவைகள் கழக தலைவர் லியோனி பிரசார வாகனத்தில் நின்றவாறு நேற்றிரவு வாக்கு சேகரித்தார். அப்போது பைக்குகளில் 5 பேர் விசில் ஊதியவாறே வந்து கூச்சலிட்டு கொண்டிருந்தனர். திடீரென பிரசார வாகனத்தில் நின்று பேசி கொண்டிருந்த லியோனி மீது சோடா பாட்டிலை வீசினர். இது வாகனத்தில் பட்டு கண்ணாடிகள் சிதறியது.
இதனால் அதிர்ச்சியடைந்த லியோனி தனது பேச்சை நிறுத்தினார். அதிர்ஷ்டவசமாக அவருக்கு காயமில்லை. இதையடுத்து பைக்குகளில் 5 பேரும் தப்பி சென்றனர். அவர்களை விரட்டி சென்று பிடிக்க முயன்றும் முடியவில்லை. அவர்கள் 5 பேரும் தவெகவினராக இருக்கும் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து பாலக்கரை போலீசில் லியோனி நேற்றிரவு புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து தப்பியோடிய 5 பேர் கும்பலை தேடி வருகின்றனர்.
