* புலம்பெயர்ந்தவர்கள் தவிப்பு கைகொடுக்காத ஒன்றிய அரசு
திருப்பூர் : திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களில் உள்ள ஜவுளி உற்பத்தி மற்றும் பல்வேறு தொழில் நிறுவனங்களில் லட்சக்கணக்கான வட மாநில தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.
இவர்களில் பீகார், உத்தரபிரதேச மாநில தொழிலாளர்களுக்கு அடுத்தப்படியாக மேற்கு வங்க மாநில தொழிலாளர்கள் அதிகளவில் உள்ளனர். தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெறுவதை போன்று மேற்கு வங்க மாநிலத்திலும் வருகிற 23 மற்றும் 29ம் தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது.
இதன் காரணமாக, திருப்பூரில் பின்னலாடை மற்றும் அதனைச் சார்ந்த உபதொழில்களில் ஈடுபட்டுள்ள அந்த மாநிலத் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் தங்களது வாக்குகளை பதிவு செய்வதற்காக சொந்த ஊர் நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
இதனால் திருப்பூர் ரயில் நிலையத்தில் நேற்று கூட்ட நெரிசல் காணப்பட்டது. திருப்பூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் செல்லும் விவேக் எக்ஸ்பிரஸ், மேற்கு வங்க மாநிலங்கள் வழியாக செல்லும் எர்னாகுளம்-டாடா நகர் எக்ஸ்பிரஸ் ரயில்களில் வழக்கத்தைவிட அதிக பயணிகள் சென்றனர்.
இந்த ரயில்களில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் கால் வைக்கக் கூட இடமில்லாத அளவுக்குக் கடும் நெரிசல் நிலவியது. வேறு வழியின்றித் தொழிலாளர்கள் ரயில்களின் படிக்கட்டுகளில் தொங்கியபடியும், பெட்டிகளுக்கு இடையே உள்ள இடைவெளிகளில் அமர்ந்தும் உயிரைப் பணயம் வைத்துப் பயணம் செய்தனர்.
இதில் பெண் தொழிலாளர்கள் தங்களது கைக்குழந்தைகளுடன் மூச்சுத்திணற வைக்கும் கூட்ட நெரிசலில் சிக்கி நீண்ட தூரப் பயணத்தைப் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் மேற்கொண்டனர்.
பண்டிகைக் காலங்கள், கோடை விடுமுறை மற்றும் தேர்தல் போன்ற முக்கிய தருணங்களில் தொழிலாளர்களின் நலன் கருதிச் சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் எனத் திருப்பூர் தொழில் துறையினரும், தொழிற்சங்கங்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இருப்பினும், ஒன்றிய அரசு இந்தக் கோரிக்கைகளை முற்றிலுமாகப் புறக்கணித்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தொகுதி மறுவரையறை சட்டத் திருத்த மசோதா போன்ற அரசியல் நகர்வுகளில் காட்டும் வேகத்தை, லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களின் பயணப் பாதுகாப்பினை உறுதி செய்வதில் ஒன்றிய அரசு காட்டுவதில்லை.
இந்தியாவின் அந்நியச் செலாவணி வருவாயில் முக்கியப் பங்கு வகிக்கும் திருப்பூர் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களின் உள்ள புலம்பெயர் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டியது ஒன்றிய அரசின் கடமையாகும்.
ஆனால், அடிப்படை வசதிகளைக் கூட மேம்படுத்தாமல் மெத்தனமாகச் செயல்படும் ஒன்றிய அரசின் அலட்சியம் புலம்பெயர் தொழிலாளர்கள் மட்டுமல்லாது தொழிற்துறையினர் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
