*படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்
ஜோலார்பேட்டை : கோடை விடுமுறையை முன்னிட்டு ஏலகிரி மலையில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் நின்று படகில் சவாரி செய்து மகிழ்ந்தனர். ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படுகிறது.
ஏலகிரியில் எப்போதும் ஒரே சீதோஷ்ணம் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்படும். மேலும் மா, பலா, வாழை உள்ளிட்ட முக்கனிகள் விளையும் இடமாகவும் ஏலகிரி மலை விளங்குகிறது.
மேலும், பொன்னேரி மலையடிவாரத்தில் இருந்து ஏலகிரி மலைக்கு செல்லும் 14 கொண்டை ஊசி வளைவுகளில் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள பார்வை மையங்களில் இயற்கை காட்சிகளைசுற்றுலா பயணிகள் ரசித்து வருகின்றனர்.
மேலும் ஏலகிரி மலையில் படகு சவாரி, செயற்கை நீர்வீழ்ச்சி, பூங்கா, முருகன் கோயில் உள்ளிட்ட சுற்றுலா தலங்களை அனைவரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்நிலையில், வார விடுமுறையான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்வார்கள்.
தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் சுற்றுலா தலத்திற்கு வந்து இங்குள்ள பல்வேறு பொழுதுபோக்கு கூடங்களை கண்டு ரசித்து செல்கின்றனர்.
அதன்படி நேற்று தமிழகம், கர்நாடகம், ஆந்திரா, பாண்டிச்சேரி கேரளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் அதிகளவு ஏலகிரி மலையில் திரண்டனர். இதனால் ஏலகிரி மலையில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இவர்கள் படகில் சவாரி செய்ய நீண்ட வரிசையில் நின்று படகு சவாரி செய்தும் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.
பின்னர் சிறுவர் பூங்கா, இயற்கை பூங்கா, செயற்கை நீரூற்று மற்றும் தனியார் பொழுதுபோக்கு கூடங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று குழந்தைகளை விளையாட வைத்தும், அவர்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கி கொடுத்தும் பெற்றோர் மகிழ்ந்தனர்.
சுற்றுலாத்தலத்தில் கூட்ட நெரிசல் அதிகரித்ததால் போக்குவரத்தை சீரமைக்கவும், அசம்பாவிதம் ஏற்படாதவாறு பாதுகாப்பு பணியிலும் ஏலகிரி மலை போலீசார் ஈடுபட்டனர்.
