2 நாள் பயணமாக துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று இலங்கைக்கு செல்கிறார்: தமிழக மீனவர்கள் 19 பேர் விடுதலை

புதுடெல்லி: துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் 2 நாள் பயணமாக இன்று இலங்கை செல்ல இருக்கும் நிலையில், எல்லை தாண்டியதாக கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த 19 தமிழக மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசு நேற்று உத்தரவிட்டது. துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் 2 நாள் அரசுமுறைப் பயணமாக அண்டை நாடான இலங்கைக்கு செல்கிறார். இந்திய துணை ஜனாதிபதி, இலங்கைக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறை. இப்பயணத்தில் அவர் இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்தித்து இருதரப்பு உறவு, வர்த்தக ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச உள்ளார். மேலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த இலங்கை தமிழர்களுடனும், தமிழ் அரசியல் தலைவர்களுடனும் அவர் கலந்துரையாட உள்ளார்.

கொழும்பில் இன்று பிற்பகலில் நடைபெறும் நிகழ்ச்சியில் இந்திய வீட்டு வசதித் திட்டத்தின் 3ம் கட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய அரசின் உதவியுடன் கட்டப்பட்ட வீடுகளை காணொலி வாயிலாக இலங்கை தமிழர் பயனாளிகளிடம் அவர் வழங்குகிறார். இதன் மூலம், இலங்கை தமிழர்களுக்கு கட்டித்தப்பட்ட மொத்த வீடுகளின் எண்ணிக்கை 50,000-ஐ எட்டும். மேலும் இத்திட்டத்தின் 4ம் கட்டத்தில் கூடுதலாக 10,000 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் நாளை நுவரெலியாவிற்கு சென்று, இந்திய வீட்டுவசதித் திட்டங்களைப் பார்வையிட்டு, தமிழ் சமூகத்தினருடன் கலந்துரையாடுகிறார். அவரது இந்த பயணத்தையொட்டி, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட 19 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய இலங்கை அரசு நேற்று உத்தரவு பிறப்பித்தது.

Related Stories: