புதுடெல்லி: காங்கிரஸ் பொதுச் செயலாளர்,பிரியங்கா காந்தி நேற்று கூறியதாவது: மக்களவையில் நடந்த வாக்கெடுப்பில் நாட்டின் கூட்டாட்சி அமைப்பை மாற்றுவதற்கான சதி முறியடிக்கப்பட்டது. இது ஜனநாயகத்திற்கு கிடைத்த ஒரு பெரிய வெற்றி. இது அரசியலமைப்புச் சட்டம், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை மற்றும் நாட்டிற்கு கிடைத்த வெற்றியாகும். அமைச்சர் அமித் ஷா மக்களவையில், காங்கிரசால் பல ஆண்டுகளுக்கு ஆளும்கட்சி வரிசையில் அமர முடியாது என்று கூறியது, அவர்களின் மனநிலையைக் காட்டுகிறது. முழு சதியும் அதிகாரத்தில் நீடிப்பதற்காகவே செய்யப்பட்டது.
பெண்களைக் காரணம் காட்டி இது செய்யப்படுகிறது, அரசு தனது விருப்பப்படி தொகுதி மறுவரையறை செய்திருக்கும்.மசோதா நிறைவேறினால் எல்லாம் சரியாகிவிடும் என்றும், அது தோல்வியுற்றால், எதிர்க்கட்சிகளைப் பெண்களுக்கு எதிரானவர்களாகச் சித்தரித்து, பெண்களின் மீட்பராகத் தங்களைக் காட்டிக் கொள்ளலாம் என்றும் நினைத்தனர். பெண்களின் மீட்பராக ஆவது எளிதல்ல. ஹத்ராஸில் பெண்களுக்கு என்ன நடந்தது. நமது ஒலிம்பிக் பதக்க வெற்றியாளர்களுக்கும் மற்றவர்களுக்கும் என்ன நடந்தது என்பதை பார்த்தோம். எதிர்க்கட்சியால் இந்த நடவடிக்கையை ஆதரிக்க முடியாது.எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டால் அவர்களைத் தோற்கடிக்க முடியும் என்பதை இது காட்டுகிறது என்றார்.
