கொல்கத்தா: அரசியலமைப்புத் திருத்த மசோதாவை நிறைவேற்ற பாஜ அரசு தவறியதன் மூலம் அந்த கட்சியின் வீழ்ச்சி தொடங்கி விட்டது என்பது வெளிப்படையாக தெரிகிறது என மம்தா பானர்ஜி கூறினார். மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மாவட்டம் உலுபெரியாவில் நேற்று நடந்த தேர்தல் பேரணியில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டு பேசியதாவது: பாஜ தோற்கடிக்கப்பட்டுவிட்டது. அதன் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் மட்டுமே இப்போது ஆட்சியில் நீடிக்கிறது. பாஜவின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது, நாங்கள் பாஜவைத் தோற்கடித்துவிட்டோம். அவர்கள் அவமானப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தனியாகப் பெரும்பான்மை இல்லை. அவர்கள் மற்றவர்களின் ஆதரவுடன் ஆட்சியில் அமர்ந்திருக்கிறார்கள்.
தொகுதி மறுவரையறைக்கான முன்னெடுப்பை பாஜ மேற்கொண்டது. காவி கட்சி நாட்டைப் பிளவுபடுத்த விரும்புகிறது. அவர்கள் (பாஜ தலைவர்கள்) நாட்டைப் பிரிக்க விரும்பியதால் தொகுதி மறுவரையறையை செய்ய விரும்பினர். பெண்களுக்குப் பிரதிநிதித்துவம் அளிக்க நாம் ஒரு மசோதாவைக் கொண்டுவரத் தேவையில்லை. திரிணாமுல் கட்சி பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரித்துள்ளது. திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர்களில் 36 % , மாநிலங்களவை உறுப்பினர்களில் 46 % பெண்கள். எங்களைப் போன்று வேறு எந்த ஒரு கட்சியும் பெண்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கவில்லை. பாஜ எங்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். 1998 முதல் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டிற்காகப் போராடி வருகிறேன். பாஜ மத்தியில் நீண்ட காலம் ஆட்சியில் நீடிக்காது. இவ்வாறு அவர் பேசினார்.
