எட்டயபுரம்: எட்டயபுரம் அருகே தூத்துக்குடி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நின்றிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் சென்னையைச் சேர்ந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சென்னை கொளத்தூர் வெற்றி நகரைச் சேர்ந்தவர் பாஸ்கரன் (45). இவர், மனைவி வனிதா(37), மகள் சந்தியா(15), மகன் பிரதீப் குமார்(13), உறவினர் வசந்தி(40) ஆகியோருடன் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு காரில் கடந்த 11ம் தேதி புறப்பட்டு உள்ளார். திருச்சி மற்றும் பல்வேறு இடங்களை பார்த்து விட்டு திருச்செந்தூர் கோயிலுக்கு நேற்று அதிகாலை சென்றனர். இங்கு தரிசனம் முடித்துவிட்டு நேற்று மதியம் திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். காரை சென்னை கொளத்தூரைச் சேர்ந்த பழனி (45) என்பவர் ஓட்டினார்.
தூத்துக்குடி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் எட்டயபுரம் அடுத்த கோட்டூர் விலக்கு அருகே சென்றபோது, சாலையோரம் நின்றிருந்த லாரி மீது கார் திடீரேன பயங்கரமாக மோதியது. இதில் காரில் இருந்த பாஸ்கரன், அவரது மனைவி வனிதா, உறவினர் வசந்தி, டிரைவர் பழனி ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். சந்தியா, பிரதீப்குமார் ஆகியோர் படுகாயத்துடன் எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
காரின் இடிபாடுகளில் சிக்கியிருந்த 4 பேரின் உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து எட்டயபுரம் போலீசார் வழக்கு பதிந்து, லாரி டிரைவர் தென்காசி மாவட்டம் ஆலங்குளம், முத்துகிருஷ்ணப்பேரியை சேர்ந்த சுப்பிரமணியனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
