சென்னை: நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்தியாவின் வளர்ச்சிக்காக பாடுபட்ட குற்றத்துக்காக தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களுக்குத் தண்டனையா? ஒன்றிய அரசு பின்வாங்கவில்லை என்றால் அதற்கான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். தொகுதி மறுவரையறை தொடர்ந்தால் மிகப்பெரிய விலையை பாஜக கொடுக்க வேண்டும். விந்திய மலைக்கு தெற்கே உள்ள தென்னிந்தியர் ஒவ்வொருவரும் கொதித்துப் போய் இருக்கிறோம்.
தமிழ்நாட்டின் குரலை மதித்து ஒன்றிய அரசு பின்வாங்கவில்லை என்றால் அதற்கான விளைகள் சந்திக்க வேண்டி இருக்கும். தொகுதி மறுவரையறைக்கு எதிராக பொது இடங்களில் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் நாளை நடைபெறும். பாஜக அரசு எல்லை மீறி தென்மாநிலங்களை தண்டிக்கிறது. தேச நலனுக்காக துணை நின்றால் எங்களது அரசியல் உரிமைகளை பறிப்பீர்களா? தமிழ்நாட்டு மக்களை 2ம் தர குடிமக்களாக மாற்ற துடிக்கும் ஒன்றிய அரசுக்கு நாம் யார் என்று காட்டவேண்டிய நேரம் வந்துவிட்டது.
தமிழ்நாட்டுக்கும் டெல்லிக்குமான தேர்தல் என நாம் சொல்வதை பாஜக தொடர்ந்து நிரூபிக்கிறது. தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவமே தேவையில்லை என்ற நிலையை உருவாக்க பாஜக சதி. அரசியல் எல்லைகளை கடந்து நம் கோரிக்கை ஓங்கி ஒலிக்கட்டும். தொகுதி மறுவரையறை சட்டத்திருத்தம் தென்மாநிலங்களுக்கு இழைக்கப்படும் வரலாற்று அநீதி.
வட மாநிலங்களுக்கு அரசியல் வலிமையை வாரி வழங்கினால் தமிழ்நாடு பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது. பாஜகவுக்கு சாதகமான வட மாநிலங்களில் தொகுதிகளை அதிகரிக்க திட்டமிடுகின்றன. திமுக தலைவராக, அனைத்துக்கும் மேல் சுயமரியாதையுள்ள தமிழனாக மீண்டும் எச்சரிக்கிறேன். தமிழ்நாட்டின் குரல்வளையை நெறிக்க நினைக்கும் பாஜகவுக்கு எதிராக ஒவ்வொரு குடும்பமும் போராடும் என்று கூறியுள்ளார்.
