கொளுத்தும் வெயில் புதுச்சேரியில் நுங்கு, இளநீர் விற்பனை அமோகம்

புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த வாரம் முதல் வெயில் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் வெயிலில் வெளியே வராமல் வீட்டுக்குள்ளே முடங்கி உள்ளனர். மேலும், தவிர்க்க முடியாத காரணங்களால் பொதுமக்கள் வெளியே செல்கின்றனர். இதனிடையே வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க நுங்கு, தர்பூசணி, இளநீர் மற்றும் பழக்கடைகளை நாடி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் நுங்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கோடைக்காலத்தில் நுங்கு சாப்பிடுவதல் உடலுக்கு தேவையான நீர்ச்சத்து கிடைக்கிறது. மிகவும் சுவையாக இருப்பது மட்டுமின்றி நுங்கில் பலவிதமான நன்மைகள் உள்ளன. உடலில் கனிமச்சத்து, சர்க்கரையின் அளவை சீராக வைத்து சுறுசுறுப்புடன் செயல்படுவதற்கு நுங்கு பெரிதும் உதவியாக இருக்கிறது.

இதுமட்டுமின்றி வைட்டமின் பி, இரும்புசத்து, கால்சியம், பொட்டாசியம் போன்ற பல்வேறு சத்துகளும் நிறைந்துள்ளன. உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுபொருளான நுங்கு உடல் வெப்பத்தை தணிக்கும் ஆற்றல் உடையது. கோடைக்காலத்தில் குளிர்பானத்தை அருந்துவதை விட நுங்கு சாப்பிடுவது உடல்நலத்திற்கு மிகவும் நல்லது என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

தற்போது புதுவையில் பல்வேறு இடங்களில் நுங்கு, இளநீர் விற்பனை களை கட்டி வருகிறது. கடந்த ஆண்டு ரூ.30க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நுங்கு, தற்போது ரூ.50 முதல் ரூ.70 வரை விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக ஒரு நுங்கு ரூ.7 க்கு விற்கப்படுகிறது.

இதேபோல், புதுவை கடற்கரை மற்றும் அதன் சுற்றியுள்ள நகரப்பகுதியில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தருவதால் இளநீர் ரூ.45 முதல் ரூ.70க்கும் வரை விற்பனை செய்யப்படுகிறது. சுட்டெரிக்கும் வெயிலில் தப்பிக்கவும், உடலை பாதுகாத்துக்கொள்ளவும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் விலைபார்க்காமல் இளநீர், நுங்கு வாங்கி சாப்பிட்டு வருகின்றனர். இதனால், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: