சென்னை: சட்டப்பேரவைத்தேர்தலுக்கான தொழில்நுட்ப பணிகள் குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறினார். இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் வருகிற 23ம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான தொழில்நுட்ப ஆயத்த பணிகளில் ஒரு முக்கிய மைல்கல்லாக, PRO Module (ECINET) குறித்த மாநில அளவிலான பயிற்சி முகாம் நேற்று சென்னையில் நடந்தது. இதில் அனைத்து சட்டமன்ற தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் தொடர்புடைய பிற அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்திய தேர்தல் ஆணையத்தின் மூத்த அதிகாரிகள், சந்தோஷ் பதாரியா தருண் மிஸ்ரா ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
தேர்தல் நாளன்று வாக்குப்பதிவு விவரங்களை எவ்வித தாமதமுமின்றி உடனுக்குடன் வழங்குவதற்காக, வாக்குப்பதிவு தரவுகளை டிஜிட்டல் முறையில் நிர்வகிக்கவும் பதிவேற்றவும் அனைத்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு தேவையான முழுமையான திறனை வழங்குவதையும், ECINET அமைப்பை செயல்படுத்துவதையும் மையமாக கொண்டு இந்த பயிற்சி அமைந்தது. மேலும், வாக்கு எண்ணிக்கை தொடர்பான செயல்பாடுகள் மற்றும் மின்னணு முறையில் அனுப்பப்பட்ட அஞ்சல் வாக்குச்சீட்டுகளின் வாக்கு எண்ணிக்கைக்கு முந்தைய செயல்முறைகள் குறித்தும் இந்த பயிற்சியில் விரிவாக எடுத்துக் கூறப்பட்டது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
