உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் மாட்டு தொழுவமாக மாறிய சிந்தடிக் ஓடுதளம்

*வீரர்களின் பயன்பாட்டுக்கு வராத அவலம்

புதுச்சேரி : புதுச்சேரி உப்பளத்தில் கடந்த 1992ம் ஆண்டு இந்திரா காந்தி விளையாட்டு அரங்கம் கட்டப்பட்டது. இங்கு 400 மீட்டர் சுற்றளவுள்ள ஓடு பாதை, புல்வெளி மைதானம், வீரர்கள் தங்குமிடம், பார்வையாளர்கள் அமர கேலரி ஆகியவை அமைக்கப்பட்டன.

இத்துடன் கால்பந்து, நீளம் மற்றும் உயரம் தாண்டுதல், ஹாக்கி, கையுந்து பந்து, கைப்பந்து மைதானங்களும் உருவாக்கப்பட்டன. பிறகு ரூ.80 லட்சத்தில் மின்விளக்கு வசதி செய்யப்பட்டது. பகல் மட்டுமல்லாமல் இரவு நேரங்களிலும் வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர்.

மாநில அளவிலான போட்டிகளும் பகல், இரவு நேரங்களில் நடத்தப்பட்டு வந்தன. மண் ஓடு தளத்திலும் மணல் திடலிலும் வீரர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தி பதக்கங்களை குவித்தனர். தொடர்ந்து, தேசிய போட்டிகளிலும் பங்கேற்று சாதித்து காட்டினர். தரம் வாய்ந்த திடலாக மாற்ற கோரிக்கைகள் வலுத்து வந்தது.

கடந்த 2021ம் ஆண்டு புதுச்சேரிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி இந்திரா காந்தி அரங்கில் கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.7 கோடி செலவில் 400 மீட்டர் சிந்தடிக் ட்ராக் (செயற்கை தடகள ஓடுபாதை ) அமைக்க அடிக்கல் நாட்டினார்.

மத்திய அரசு இதற்கான முதற்கட்ட நிதியாக ரூ.3 கோடி நிதியை விடுவித்தது. அதன் மூலம் ஆரம்ப கட்ட பணியாக 400 மீட்டர் ஓடு பாதை முழுவதும் தார் சாலை அமைக்கப்பட்டது. சிந்தடிக் ஒட்டும் பணிக்காக ஆஸ்திரேலியாவில் இருந்து சிந்தடிக் டிராக் லேயர் கொண்டு வரப்பட்டது. பிறகு கடந்த மார்ச் மாதம் ரூ.1.7 கோடி நிதியை மத்திய அரசு வழங்கியது.

இதையடுத்து 400 மீட்டர் சுற்றளவுள்ள ஓடுபாதையில் சிந்தடிக் ஓடுதளம் அமைக்கும் பணி மும்முரமாக மேற் கொள்ளப்பட்டது. தார் சாலை மீது சிந்தடிக் லேயர் ஒட்டப்பட்டன. தொடர்ந்து தடகள வீரர்கள் ஓடுவதற்கான கோடுகள் வரையப்பட்டன.

விளையாட்டு மைதானத்தில் பிரதமர் அடிக்கல் நாட்டி 4 ஆண்டுகளை கடந்து சிந்தடிக் டிராக் எனப்படும் செயற்கை ஓடுபாதை பயன்பாட்டுக்கு வராமல் வீரர்கள் பாதிப்படைந்தனர்.

சமீபத்தில் புதுச்சேரிக்கு வந்த பிரதமர் மோடி காணொளி ஓடுதளத்தை திறந்து வைத்தார் ஆனால் ஓடுதளம் தற்போது, பராமரிப்பு இன்றியும் பாதுகாப்பு இல்லாமலும் இருப்பதால் பல கோடி ரூபாய் செலவில் உருவான ஓடுதளம் விரைவில் சீரழியும் நிலை ஏற்பட்டு உள்ளது.

திடலுக்குள் வரும் மாடுகள் அங்கிருக்கும் புற்களை மேய்ந்து விட்டு ஓடுதளத்தில் சாணி, சிறுநீர் கழித்து விட்டு அங்கேயே படுத்து விடுகிறது காலையில் நடை பயிற்சிக்கு வரும் பொது மக்கள் அந்த மாடுகளை விரட்டி விடுகின்றனராம்.

ஓடுதளத்தில் பல இடங்களில் குப்பையும் கூளமும் நிரம்பி உள்ளது. மைதானத்தில் சுற்றித் திரியும் நாய்கள் ஓடுதளத்தில் புகுந்து சிந்தடிக்கை ட்ராக்கை பிராண்டி கடித்து குதறி வருகிறது. எதற்காக பல கோடி ரூபாய் செலவில் ஓடுதளம் உருவாக்கப்பட்டது, அது அத்தனையும் பாழாகி வருகிறதே என்று பொதுமக்கள் புலம்பி வருகின்றனர்.

Related Stories: