*கோபியில் சோகம்
கோபி : கோபி அருகே மகள் காதலனுடன் சென்றதால் மனமுடைந்த பெற்றோர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள நாகர்பாளையம் சக்தி கார்டனை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் மகன் மாதேஷ்வரன் (45). இவர், பிரிண்டிங் பிரஸ் டிசைனராக வேலை செய்து வருகிறார்.
இவரது மனைவி சந்திரா (40) அத்தாணி மின்வாரிய அலுவலகத்தில் போர்மேனாக வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு சோனா என்ற மகளும், பாலாஜி என்ற மகனும் உள்ளனர்.
சோனா, கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் சிவில் டிசைனராக வேலை செய்து வருகிறார். சோனா கடந்த சில மாதங்களாக தாமோதரன் என்பவரை காதலித்து வந்ததாக தெரிகிறது. இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை சோனா, வீட்டை விட்டு வெளியேறி காதலனுடன் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாதேஷ்வரனும், சந்திராவும் வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தனர். அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர், இருவரும் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதுகுறித்து கோபி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். மகள் காதலனுடன் சென்றதால் மனமுடைந்த பெற்றோர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
