பெங்களூரு: காங்கிரஸ் கட்சியின் மூத்த எம்எல்ஏக்களில் ஒருவரும் டெல்லி பிரதிநிதியுமான டி.பி. ஜெயச்சந்திரா தனக்கு அமைச்சர் பதவி தரவேண்டும் என்று வெளிப்படையாக குரல் எழுப்பியுள்ளார். அத்துடன் 40க்கும் மேற்பட்ட மூத்த எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்திய ஜெயச்சந்திரா டெல்லிசென்று மேலிட தலைவர்களை சந்தித்து பேச முடிவு செய்துள்ளார்.
இது குறித்து டி.பி. ஜெயச்சந்திரா கூறுகையில், ‘என்னை போன்ற மூத்த எம்எல்ஏக்ளுக்கு அமைச்சர் பதவி கிடைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம். அதற்கு காரணம், அடுத்த தேர்தலில் தொகுதி எல்லை மாற்றி அமைக்கப்படும். வயதான நிலையில் எங்களுக்கு அமைச்சர் பதவி இப்போது கிடைத்தால் தவிர பிறகு அது சாத்தியம் ஆகாது என்பதால் இரண்டு வருடம் அமைச்சர் பதவி கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறோம். எங்களின் விருப்பத்தை கட்சி தலைமையிடம் தெரிவிப்பதற்காக முடிவு செய்துள்ளோம்’ என்றார்.
