சாதிவாரி கணக்கெடுப்பை நீர்த்து போக வைக்க மோடி அரசு முயற்சி: காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுடெல்லி: சாதிவாரி கணக்கெடுப்பை நீர்த்து போக வைக்க மோடி அரசு முயற்சிப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தன் எக்ஸ் பதிவில், “மோடி அரசு கடந்த 2024ம் ஆண்டு ஏப்ரலில் சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிராக இருந்தது. மேலும் ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் பேசிய பிரதமர் மோடி, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டியதன் அவசியத்தை சொன்ன காங்கிரசை நகர்ப்புற நக்சல் மனநிலையில் இருப்பதாக சொன்னார்.

ஆனால் கடந்த 2025ம் ஆண்டு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதல் அதிர்ச்சியில் மக்கள் இருந்தபோது, ஏப்ரல் 30ம் தேதி, நடைபெறவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஒருபகுதியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என பாஜ அரசு திடீரென அறிவித்தது. அத்துடன், 2026 மார்ச் 30ம் தேதி நடந்த செய்தியாளர் சந்திப்பில், “முழு மக்கள் தொகை கணக்கெடுப்பும் டிஜிட்டல் முறையில் நடத்தப்படுவதால், 2027ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் பெரும்பாலான முடிவுகள் 2027ம் ஆண்டிலேயே கிடைக்கும் என பதிவாளர் பொது மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் கூறினார்.

ஆனால் தற்போது மோடி அரசாங்கம், 334-ஏ பிரிவை திருத்த விரும்புகிறது. சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிவுகள் சில ஆண்டுகளுக்கு கிடைக்காது என்று கூறுகிறது. பீகார் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் விரிவான சாதிவாரி கணக்கெடுப்பு பணிகளை ஆறு மாதங்களில் முடித்து விட்டன. சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிவுகள் உடனடியாக கிடைக்காது என்பதால், அதன் தரவுகளை பயன்படுத்தி மகளிர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்த மோடி அரசு திட்டமிடுகிறது.

இந்த விவகாரத்தில் வழக்கம்போல் மோடி அரசு நாட்டை தவறாக வழிநடத்துகிறது. சாதிவாரி கணக்கெடுப்புடன், மகளிர் இடஒதுக்கீட்டு சட்ட திருத்தத்தை இணைத்து, அதை சில ஆண்டுகளுக்கு தள்ளி போடுவது நாட்டை ஏமாற்றும் செயல். சாதிவாரி கணக்கெடுப்பை நீர்த்து போக வைக்க மோடி அரசு விரும்புகிறது” என அடுக்கடுக்காக குற்றம்சாட்டி உள்ளார்.

Related Stories: