ஒன்றிய பாஜ அரசு கவிழும் எஸ்ஐஆர் நாட்டின் மிகப்பெரிய முறைகேடு: மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் மொத்தமுள்ள 294 பேரவை தொகுதிகளில் 152 தொகுதிகளுக்கு வரும் 23ம் தேதியும், மீதமுள்ள 142 தொகுதிகளுக்கு 29ம் தேதியும் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்ட தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. மேற்குவங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைக்கு பிறகு வௌியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி 90 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

மேற்குவங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி ஆரம்பம் முதலே எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார். இந்நிலையில், புர்பா பர்தமான் மாவட்டம் கந்தகோஷ் என்ற இடத்தில் நேற்று நடந்த தேர்தல் பிரசார பேரணியில் மம்தா பானர்ஜி கலந்து கொண்டு வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய மம்தா பானர்ஜி, “தேர்தலுக்கு முன்பாக பாஜ வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்கிறது.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் தேர்தலில் வெற்றி பெற பாஜ பல சூழ்ச்சிகளை செய்கிறது. வாக்காளர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். வாக்களிக்கும்போது வாக்குப்பதிவு இயந்திரங்களை சரியாக கண்காணிக்க வேண்டும்” என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய மம்தா பானர்ஜி, “எஸ்ஐஆர் நடவடிக்கை என்பது நாடு இதுவரை கண்டிராத மிகப்பெரிய முறைகேடு. நடப்பாண்டில் ஒன்றிய பாஜ அரசு கவிழும். இது அனைவருக்கும் தெரியும்” என ஆவேசமாக கூறினார்.

* திரிணாமுல் காங். ஆட்சியை அகற்ற பாஜ ரூ.1,000 கோடி பேரம்
பாங்குரா மாவட்டம் ஓண்டாவில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, “மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை அகற்றி, ஆட்சியை பிடிக்க ஆம் ஜனதா உன்னயன் கட்சி தலைவர் ஹூமாயூன் கபீருடன் வாக்குகளை பிரிப்பதற்காக பாஜ ரூ.1,000 கோடி ரூபாய்க்கு பேரம் பேசியுள்ளது. இதற்காக ஹூமாயூன் கபீருக்கு முன்பணமாக ரூ.200 கோடி கொடுத்துள்ளது. இதுதொடர்பாக கபீர் பேசும் வீடியோ வௌியாகி உள்ளது” என குற்றம்சாட்டினார்.

Related Stories: