இஸ்லாமாபாத்: பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில் அமெரிக்கா-ஈரான் இடையேயான நேரடி இருதரப்பு பேச்சுவார்த்தை பாகிஸ்தானில் நேற்று நடந்தது. இதில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் முன்னிலையில் இரு நாடுகளின் முக்கிய தலைவர்கள் அடங்கிய பிரதிநிதிகள் குழு இருதரப்பு அமைதி ஒப்பந்தத்திற்கான ஆலோசனை நடத்தியது. 47 ஆண்டுகால வரலாற்றில் அமெரிக்கா-ஈரான் இடையே நடந்த முதல் நேரடி பேச்சுவார்த்தை இது என்பதால் சர்வதேச அளவில் மிகவும் கவனம் பெற்றுள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28ம் தேதி போர் தொடுத்தன. இப்போரால் வளைகுடா நாடுகளில் இருந்து உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படும் நீர்வழிப்பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதால், சர்வதேச அளவில் பொருளாதார பாதிப்புகள் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, 2 வார கால போர் நிறுத்தம் மேற்கொள்ள கடந்த 8ம் தேதி இருதரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டது.
இந்த 2 வார காலத்தில், மத்தியஸ்தம் செய்யும் பாகிஸ்தானில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தி அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ள அமெரிக்காவும், ஈரானும் முடிவு செய்தன. இதன்படி, பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் இருதரப்பு அமைதி ஒப்பந்த பேச்சுவார்த்தை நேற்று நடப்பதாக அறிவிக்கப்பட்டது. ஈரான் தரப்பில் 10 அம்ச நிபந்தனைகளும், அமெரிக்கா தரப்பில் 15 அம்ச கோரிக்கைகளும் வெளியிடப்பட்டன. ஆனால், பேச்சுவார்த்தைக்கு முன்பாக இருதரப்பிலும் காரசார கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.
அமைதி ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரான் மீது மீண்டும் ராணுவ நடவடிக்கை தொடங்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்தார். அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், பாகிஸ்தானுக்கு புறப்படும் முன்பாக, ‘‘அமெரிக்காவுடன் விளையாடக்கூடாது’’ என மிரட்டினார். ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் அளித்த பேட்டியில், ‘‘பேச்சுவார்த்தைக்கு முன்பாக பரஸ்பரம் ஒப்புக் கொள்ளப்பட்ட படி லெபனானில் போர் நிறுத்தம் மற்றும் ஈரானின் முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவித்தல் ஆகிய 2 விஷயங்களும் நிறைவேற்றப்படவில்லை’’ என குற்றம்சாட்டினார்.
ஈரான் துணை அதிபர் முகமது ரெஸா ஆரிப், ‘‘இஸ்ரேலிய நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டால் எந்தவொரு ஒப்பந்தமும் எட்டப்படாது. மீண்டும் எங்களை பாதுகாக்க பதில் நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதற்கு உலகம் பெரும் விலையை செலுத்த நேரிடும்’’ என எச்சரித்தார். இதனால் இருதரப்பு நேரடி பேச்சுவார்த்தை நடக்குமா என்ற குழப்பத்திற்கு மத்தியில் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தலைமையிலான அமெரிக்க பிரதிநிதிகள் குழுவும், நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் தலைமையிலான ஈரான் பிரதிநிதிகள் குழுவும் இஸ்லாமாபாத்துக்கு நேற்று காலை வந்தடைந்தன.
அமெரிக்க குழுவில் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காப், அதிபர் டிரம்பின் மருமகன் ஜெரட் குஷ்னர் ஆகியோரும், ஈரான் குழுவில் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி உள்ளிட்டோரும் இடம் பெற்றிருந்தனர். இருநாட்டு குழுவினரும் வந்த விமானங்கள் தங்கள் வான் எல்லைக்குள் நுழைந்ததும், பாகிஸ்தான் விமானப்படை விமானங்கள் பாதுகாப்புடன் அழைத்து சென்றது உட்பட இஸ்லாமாபாத் முழுவதும் உச்சகட்ட பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு முன்பாக, குழப்பங்களை தீர்க்க, அமெரிக்கா, ஈரான் பிரதிநிதிகள் குழு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை தனித்தனியாக சந்தித்து பேசினர்.
இஸ்லாமாபாத்தின் செரீனா சொகுசு ஓட்டலில் இந்த சந்திப்புகள் நடந்தன. இதில் சில சந்தேகங்கள் தீர்க்கப்பட்டதைத் தொடர்ந்து, சில மணி நேரத்தில் அமெரிக்கா-ஈரான் இடையேயான நேரடி பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டது. இதில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், பீல்டு மார்ஷல் முனீர் உள்ளிட்ட பாகிஸ்தான் பிரதிநிதிகளும் பங்கேற்றனர். அமெரிக்கா, ஈரான் தரப்பில் அணுசக்தி, ராணுவ மற்றும் பொருளாதார நிபுணர்களும் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர். ஈரானில் கடந்த 1979ம் ஆண்டில் இஸ்லாமிய புரட்சிக்குப் பிறகு மக்களாட்சி ஏற்பட்டது.
அதிலிருந்தே 47 ஆண்டுகாலமாக ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பல்வேறு மோதல்கள் நடக்கின்றன. இந்த சூழலில் இரு நாடுகளும் பிரச்னையை தீர்க்க நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது இதுவே முதல் முறை. இதனால் இந்த பேச்சுவார்த்தை சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. நீண்ட நேரம் நடந்த இந்த முதல்கட்ட இருதரப்பு பேச்சுவார்த்தை முடிவடைந்ததும் அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அறிக்கை வெளியிடப்படும் என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.
* லெபனானில் போரை நிறுத்த இஸ்ரேல் மறுப்பு
ஈரானைத் தொடர்ந்து லெபனானில் ஹிஸ்புல்லா போராளிகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ஈரான் போருடன் லெபனானிலும் சண்டை நிறுத்தம் ஏற்படும் என அறிவிக்கப்பட்ட போதிலும் இஸ்ரேல் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்துகிறது. இஸ்ரேல், லெபனான் இடையே அடுத்த வாரம் செவ்வாய் கிழமை போர் நிறுத்த பேச்சுவார்த்தை அமெரிக்காவில் நடக்க உள்ளது.
ஆனால் ஈரான்-அமெரிக்கா மறைமுக பேச்சுவார்த்தைக்கு மத்தியில் நேற்றும் லெபனான் மீது ஈரான் வான்வழித்தாக்குதல் நடத்தியது. இதில் 10 பேர் கொல்லப்பட்டதாக லெபனான் தேசிய செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது. அடுத்த வாரம் வாஷிங்டனில் லெபனான் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் போது, ஹிஸ்புல்லாவுடனான போர்நிறுத்தம் குறித்து விவாதிக்கப்போவதில்லை என்று இஸ்ரேல் கூறி உள்ளது.
லெபனான் மீதான தாக்குதலை நிறுத்துமாறு அதிபர் டிரம்ப் உத்தரவிட்டும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு செவிசாய்க்கவில்லை. இதனால் நெதன்யாகு மீது டிரம்ப் கடும் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையே நேற்று ஒரே நாளில் ஹிஸ்புல்லாவின் 200 நிலைகளை தாக்கியதாக இஸ்ரேல் கூறி உள்ளது.
* எண்ணெய் வாங்க எங்களிடம் வாங்க! அதிபர் டிரம்ப் அழைக்கிறார்
பாகிஸ்தானில் ஈரானுடனான பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சமூக ஊடக பதிவில், ‘‘உலகின் மிகப்பெரிய எண்ணெய் கப்பல்களில் சிலவும், முற்றிலும் காலியாக உள்ள பல கப்பல்களும் தற்போது அமெரிக்காவை நோக்கி பயணித்து கொண்டிருக்கின்றன. உலகின் மிகச்சிறந்த, தரமான எண்ணெய் மற்றும் எரிவாயுவை ஏற்றிக் கொள்ள அவை வருகின்றன. 2 மிகப்பெரிய எண்ணெய் பொருளாதாரங்களை ஒன்றிணைத்தால் கிடைப்பதை விடவும், எங்களிடம் அதிக அளவு எண்ணெய் உள்ளது.
அதுவும் மிக உயர்ந்த தரத்தில்! நாங்கள் உங்களுக்காகக் காத்திருக்கிறோம். விரைவான சேவைக்கு உத்தரவாதம்!’’ என அமெரிக்காவின் கச்சா எண்ணெயை வாங்க உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். மேலும் டிரம்ப் அளித்த சமீபத்திய டிவி பேட்டி ஒன்றில், ஈரான் ஒரு தோல்வி அடைந்த நாடு என்றும், ஹார்முஸ் ஜலசந்தி விரைவில் மீண்டும் திறக்கப்படும் என்றும், உலகளாவிய எரிசக்தி வழித்தடங்களுக்கு பிற மாற்று வழிகள் இருப்பதாகவும் கூறி உள்ளார்.
* ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க தொடங்கிவிட்டோம் டிரம்ப் அறிவிப்பு; ஈரான் மறுப்பு
இருதரப்பு பேச்சுவார்த்தை நடக்கும் சூழலிலும், ஈரானை கோபப்படுத்தும் கருத்துக்களை அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று தொடர்ச்சியாக வெளியிட்டு வந்தார். நேரடி டிவி சேனல் பேட்டியில் அவர், ‘‘ஈரான் தோல்வி அடைந்து வரும் நாடு. விரைவில் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்போம்’’ என்றார். பின்னர் தனது ட்ரூத் சமூக ஊடக பதிவில், ‘‘ஈரான் பெரும் இழப்பை சந்தித்துள்ளது.
அதன் கடற்படை, விமானப்படை, வான் பாதுகாப்பு அமைப்புகள் முழுவதும் அழிக்கப்பட்டுள்ளது. ஏவுகணை, டிரோன்களும் பெருமளவில் காலியாகி விட்டன. நீண்ட கால தலைவர்களும் உயிரோடு இல்லை. எல்லா புகழும் அல்லாவுக்கே! அவர்களின் 28 கண்ணிவெடி கப்பல்களும் மூழ்கடிக்கப்பட்டு விட்டன. இறுதியாக ஹார்முஸ் ஜலசந்தியை திறக்கும் பணி தொடங்கப்பட்டு விட்டது.
உலக நாடுகளுக்கு உதவும் வகையில் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக அமெரிக்கா போர் கப்பல்கள் பயணிக்கின்றன. சீனா, ஜெர்மனி, தென் கொரியா, பிரான்ஸ் என யாருக்கும் தைரியம் இல்லாத நிலையில் நாங்கள் இப்பணியை மேற்கொள்கிறோம்’’ என பரபரப்பை ஏற்படுத்தினார். இத்தகவலை மறுத்த ஈரான் அரசு தொலைக்காட்சி வெளியிட்ட செய்தியில், ‘ஈரான் அனுமதியின்றி எந்த கப்பலும் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கவில்லை.
அமெரிக்க போர் கப்பல்கள் கடந்து சென்றால் 30 நிமிடங்களுக்குள் அதன் மீது தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அந்த எச்சரிக்கையை தொடர்ந்து அமெரிக்க கப்பல்கள் பின்வாங்கின’’ என ஈரான் ராணுவ மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
* ஈரான் சொத்துகள் விடுவிக்கப்படவில்லை
பேச்சுவார்த்தைக்கு முன்பாக, ஏற்கனவே ஒப்புக் கொண்டபடி கத்தார் மற்றும் பிற சர்வதேச நிதி நிறுவனங்களில் முடக்கப்பட்டிருந்த ஈரான் நிதி உள்ளிட்ட சொத்துக்களை அமெரிக்கா விடுவித்ததாக ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டது. ஆனால் சிறிது நேரத்தில் இத்தகவலை வெள்ளை மாளிகை மறுத்தது.
இதைத் தொடர்ந்து, ஈரான் அரசு செய்தி தொடர்பாளர் பாத்திமா மொஹஜெரானி, ‘‘ஈரான் தனது இறையாண்மை உரிமைகளில் சமரசம் செய்து கொள்ளவோ, பின்வாங்கவோ மாட்டாது. ஆனால் அமெரிக்காவை நம்பவில்லை. எந்த நேரத்திலும் வலுவான பதிலடிக்கு தயார் நிலையில் இருக்கிறோம்’’ என கூறியதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
