வாலாஜாபாத், ஏப்.10: வரும் 23ம் தேதி சட்டமன்ற நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம், உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளர் க.சுந்தர் உத்திரமேரூர் தொகுதிக்கு உட்பட்ட பேரூர் மற்றும் ஒன்றிய பகுதிகளில் வாக்கு சேகரித்து வருகிறார். கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுக ஆட்சியின்போது தமிழக மக்களுக்கு கொண்டு வந்த திட்டங்கள், அதன் மூலம் பயனடைந்த பயனாளிகள் மட்டுமின்றி தற்போது தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ள அனைத்தையும் தமிழக மக்களுக்கு நிறைவேற்றிட மீண்டும் உதயசூரியனுக்கு வாக்களிக்க வேண்டும் என உத்திரமேரூர் தொகுதி முழுவதும் வீதி வீதியாக சென்று மக்களிடம் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அந்த வகையில் நேற்று வாலாஜாபாத் ரவுண்டானா பகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் க.சுந்தர் கலந்துகொண்டு தேர்தல் அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மேலும் அங்கு கூடியிருந்த கூட்டணி கட்சி நிர்வாகிகளிடம் கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழக அரசு கொண்டுவந்துள்ள ஆக்கப்பூர்வ திட்டங்களை மக்களிடம் எடுத்துக்கூறி உதயசூரியனுக்கு வாக்கு சேகரிக்க வலியுறுத்தினார்.
மேலும் திமுக ஆட்சி மீண்டும் அமைந்தால் அளிக்கப்பட்டுள்ள தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்ற வேண்டுமென்றால் உதயசூரியனுக்கு வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தினார். இந்த நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் எம்பி செல்வம், ஒன்றிய செயலாளர் சேகர், பேரூர் செயலாளர் பாண்டியன், ஒன்றியக்குழு தலைவர் தேவேந்திரன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் தியாகராஜன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சஞ்vசய் காந்தி, பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர் சுகுமாரன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
