கோடை காலமாக இருப்பதால் வாக்குச்சாவடி மையங்களில் பந்தல் குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும்

செங்கல்பட்டு, ஏப்.3: மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் உள்ள பதற்றமான வாக்குசாவடிகளை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான மாலதி ெஹலன் ஆய்வு ஆய்வு செய்தார். அப்போது கோடை காலமாக இருப்பதால் வாக்குச்சாவடி மையங்களில் சாமியானா பந்தல் மற்றும் குடிநீர் வசதி ஏற்படுத்தித்தர வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் இந்த மாதம் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் பதற்றமான வாக்குசாவடி மையமாக கருதப்படும் அச்சிறுப்பாக்கம் ஒன்றியம், மொறப்பாக்கம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குசாவடி மையத்தினை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான மாலதி ஹெலன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான சக்கர நாற்காலிகள் மற்றும் பாதை வசதி ஆகியவற்றை உடனடியாக அமைத்திடுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார். இதனைத் தொடர்ந்து, மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் மார்வார் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குசாவடி மையத்தினை பார்வையிட்டு வாக்குசாவடி மையத்தில் மின்விசிறி, மின்விளக்கு ஆகியவற்றை தேவையான அளவு செய்து தருமாறு பொதுபணித்துறைக்கு அறிவுறுத்தினார். மேலும், விளங்கனூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியில் உள்ள வாக்குசாவடி மையத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் மாலதி ஹலன் பார்வையிட்டு ஆய்வு செய்து, அங்கு செய்யப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

மேலும், செய்யூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சூனாம்பேடு அரசினர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உள்ள வாக்குசாவடி மையத்தினை பார்வையிட்டார். இந்த வாக்குசாவடி மையத்தில் மரங்கள் அதிகமாக இல்லாத காரணத்தினால் வாக்காளர்களுக்கு சாமியானா பந்தல் அமைத்து தர வேண்டுமென்றும், கோடை காலமாக இருப்பதால் வாக்காளர்களுக்கு தேவையான குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுக்கவேண்டுமென்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து, கூவத்தூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியில் உள்ள வாக்குசாவடி மையத்தினை பார்வையிட்ட மாவட்ட தேர்தல் அலுவலர், வாக்குசாவடி மைய கட்டடங்களில் சீரமைப்பு பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டுமென்று ஊரக வளர்ச்சித் துறையினருக்கு உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து, செய்யூர் சட்டமன்ற தொகுதி கடலூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியில் உள்ள வாக்குசாவடி மையத்தினை பார்வையிட்டார். வாக்குசாவடி அமைந்துள்ள பகுதியினை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக்கொள்ள வேண்டுமென்று அறிவுறுத்தினார். மதுராந்தகம், செய்யூர் சட்டமன்ற தொகுதிகளில் பதற்றமான வாக்குசாவடி மையத்தினை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட தேர்தல் அலுவலருடன் சென்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர், அங்கு வாக்காளர்கள் அமைதியாகவும், சுதந்திரமாகவும் வாக்களிக்க உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடுக்க வேண்டுமென்று காவல் துறையினருக்கு உத்தரவிட்டார். இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நரேந்திரன், வெங்கடாச்சலம் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Related Stories: