வாலாஜாபாத், ஏப்.9: காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதியின் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளரும், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளருமான க.சுந்தர் நேற்று வாலாஜாபாத் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட முத்தியால்பேட்டை, அய்யம்பேட்டை, ஏக்கனாம் பேட்டை, நாயக்கன்பேட்டை, தாங்கி, வில்லிவலம் உள்ளிட்ட கிராமங்களில் வீதிவீதியாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், திராவிட மாடல் அரசு கடந்த 5 ஆண்டுகளில் வாலாஜாபாத் சுற்றுவட்டார கிராமப்புற பகுதிகளில் குடிநீர் பிரச்சினையைப் போக்க மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, அரசு ஆரம்பப் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள், பல ஆண்டுகளாக சாலை இன்றி இருந்த தெருக்களில் சிமென்ட் சாலைகள், மின்விளக்கு, கிராமப்புற விளையாட்டு மைதானம், பல ஆண்டுகளாக வீட்டுமனை பட்டா இன்றி இருந்த மக்களுக்கு உடனடி தீர்வாக அரசு பட்டா வழங்கியது, பல ஆண்டுகளாக பேருந்து இல்லாத கிராமப்புறங்களுக்கு அரசு பேருந்து அதில் மகளிர் விடியல் பயணம் உள்ளிட்ட பல்வேறு ஆக்கபூர்வமான திட்ட பணிகளை திமுக அரசு செய்துள்ளது என்றார்.
மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த திட்டங்களான மகளிர் உரிமைத் தொகை, மக்களை தேடி மருத்துவம், பெண்களுக்கான விடியல் பயணம், புதுமைப்பெண் திட்டம், நான் முதல்வன், காலை உணவு திட்டம், தமிழ் புதல்வன், கலைஞர் காப்பீடு, வீட்டுமனை பட்டாக்கள், விவசாய பயிர் கடன் தள்ளுபடி, மீனவர் களுக்கான நலத்திட்டங்கள், உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின் உள்ளிட்ட திட்டங்களின் சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரத்தை வழங்கி, மேலும் பல்வேறு மக்கள் நல திட்டங்கள் செயல்பட மீண்டும் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். இந்நிகழ்வில் செல்வம் எம்பி, வி.சி.க மாவட்ட செயலாளர் எழரசு, தேமுதிக மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் சேகர், பேரூர் செயலாளர் பாண்டியன், ஒன்றியக்குழு தலைவர் தேவேந்திரன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் தியாகராஜன், ஒன்றிய அவைத் தலைவர் சுந்தரமூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர் சஞ்சய்காந்தி, ஒன்றிய துணை செயலாளர் குப்புசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
