மாமல்லபுரம், ஏப்.3: மாமல்லபுரம் நகராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இங்கு, 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். மாமல்லபுரத்தில் சுற்றுலாவை மேம்படுத்தவும், பல்வேறு மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளவும் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, கடந்த 2023ம் ஆண்டு சட்டமன்ற கூட்ட தொடரில் 110 விதியின் கீழ் நகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது. பின்னர், கடந்தாண்டு பிப்ரவரி மாதம் நகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டது.
பின்னர், மார்ச் மாதம் முதல் நகராட்சியாக செயல்பட தொடங்கியது. இந்நிலையில், சட்டமன்ற தேர்தல் நேரத்தில் மாமல்லபுரம் நகராட்சி அலுவலக நுழைவு வாயில் பகுதியில் நகராட்சி அதிகாரிகள் யாரிடமும் அனுமதி பெறாமல், தன்னிச்சையாக விநாயகர் கோயில் கட்டும் பணியை தொடங்கியுள்ளனர். இதனால், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மாமல்லபுரம் நகராட்சியில் இந்துக்கள், இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் எந்த பிரிவினையும் இன்றி சகோதர, சகோதரிகளாக வசித்து வருகின்றனர். இவர்களுக்குள் மத கலவரத்தை ஏற்படுத்தும் வகையில், நகராட்சி அதிகாரிகள் யாரிடமும் அனுமதி பெறாமல் தன்னிச்சையாக விநாயகர் கோயில் கட்டி வருகின்றனர். இதைப் பார்க்கும், இஸ்லாமியர்கள் மசூதி கட்ட வேண்டும் எனவும், கிறிஸ்தவர்கள் தேவாலயம் கட்ட வேண்டும் எனவும் ஒரு தூண்டுதல் ஏற்படுகிறது.
இதனால், தேர்தல் நேரத்தில் மத கலவரம் ஏற்படும் சூழ்நிலை உருவாகும் என அச்சம் ஏற்பட்டுள்ளது. மக்களுக்காக வேலை செய்ய வரும் அரசு அதிகாரிகளே மத கலவரம் ஏற்படும் வகையில் செயல்பட்டால், மக்கள் யாரிடம் சென்று புகார் செய்வார்கள் என்ற அச்சம் சமூக ஆர்வலர்கள் மத்தியில் எழுகிறது. எனவே, மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான மாலதி ஹெலன் உடனடியாக தலையிட்டு, மாமல்லபுரம் நகராட்சி நுழைவு வாயில் பகுதியில் விநாயகர் கோயில் கட்டும் பணியை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக வலைதளத்தில் உள்ளூர் மக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
