உடல் வெப்பத்தை வெளியேற்ற முடியாமல் கோடைகாலத்தில் கறவை மாடுகள் அதிக சோர்வு அடைந்து பலவீனமாக மாறும்

பாதுகாப்பது குறித்து மருத்துவர்கள் விளக்கம்

அரியலூர் : கோடைகாலத்தில் உடல் வெப்பத்தை வெளியேற்ற முடியாமல் கறவை மாடுகள் சோர்வு அடையும் என்பதால் அதனை பாதுகாக்கும் முறையினை கால்நடை மருத்துவர்கள் விளக்கமாக கூறி உள்ளனர்.கிராமங்களில் உள்ள பெரும்பாலான வீடுகளில் ஆடு, மாடு, கோழி, சேவல் உள்ளிட்ட கால்நடைகள் அவசியம் இருக்கும்.

இந்த கால்நடைகள் பாதுகாப்பாக கொட்டகை அமைத்து பராமரித்தாலும், கோடை கால வெப்பம் அவற்றை பல்வேறு வகையில் தாக்கும். இதனால் அவைகள் மிக விரைவில் சோர்வடைந்து, போதிய அளவு தீவனங்கள் எடுத்து கொள்ள முடியாமல், பலவீனமாக மாறும். இதனை தவிர்க்க கோடை காலத்தில் கால்நடைகள் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

இதனால் கால்நடைகளை வளர்ப்போருக்கு கோடைகாலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள் குறித்து கால்நடை மருத்துவர்கள் விளக்கமாக கூறி உள்ளனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது:கோடைக்காலத்தில் கறவை மாடுகளில் உற்பத்தியாகின்ற வெப்பத்தை வெளியேற்ற முடியாமல் உடல் வெப்பநிலை உயர்ந்து வெப்ப சோர்வு ஏற்படுகிறது. இதனால் பசியின்மை, உடல் சோர்வு நடுக்கம், கீழேவிழுதல் ஏற்படுகிறது.

இவற்றை தடுக்க கால்நடைகளுக்கு ஒரு நாளைக்கு 4 அல்லது 5 முறையாவது தண்ணீர் காட்ட வேண்டும். கறவை மாடுகளுக்கு தண்ணீர் குடிக்க செய்யும் போது எப்பொழுதும் கலப்பு தீவனத்தை தண்ணீரின் மேல் சிறிதளவு தூவ வேண்டும். அப்போது மாடுகளின் தண்ணீர் குடிக்கும் அளவு அதிகரிக்கும். உப்பு கட்டிகளை கொட்டகைகளில் தொங்க விடுவதினால் கால்நடைகளின் தண்ணீர் பருகும் தன்மை அதிகரிக்கும்.

நெருக்கமான இடத்தில் கால்நடைகளை கட்ட வேண்டாம். கொட்டகையினைச் சுற்றி மரங்களை நட்டு அப்பகுதியினைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளலாம். மாலையில் பால் கறக்கும் நேரத்தை தாமதப்படுத்த வேண்டும். எருமை மாடுகள் வளர்ப்போர் குளியல் தொட்டிகளை உருவாக்க வேண்டும். கோடைக்காலங்களில் மாடுகளை காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மாலையில் 3 மணி முதல் 7 மணி வரையிலும் மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டும்.

பொதுவாக வெள்ளாடுகளில் வெப்பத்தின் தாக்கத்தால் ஏற்படும் விளைவுகள் சற்று குறைவாகவே இருக்கும். ஆனால் செம்மறியாடுகளில் உடல் ரோமங்கள் அதிகமாக இருப்பதால் அச்செம்மறியாடுகளில் வெப்ப அயர்ச்சியினால் ஏற்படும் விளைவுகள் அதிகமாக இருக்கும்.

கோடை காலங்களில் ஆடுகளுக்கு தேவையான சோடியம் மற்றும் பொட்டாசியம் சத்துக்களை தாதுஉப்பு கட்டிகளை கட்டி தொங்க விடுவதன் மூலம் சக்தி அளிக்கலாம். மேய்ச்சல் பகுதியில் சுத்தமான குடிநீர் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு கால்நடை மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Related Stories: