*30ம் தேதி வரை நடக்கிறது
வேலூர் : வேலூர் அரசு மாதிரி பள்ளியில் 70 மாணவர்களுக்கு ஒரு மாதம் நீட் பயிற்சி துவங்கியது. இப்பயிற்சி வரும் 30ம் தேதி வரை நடைபெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மருத்துவ படிப்பில் சேருவதற்கு நீட் நுழைவுத்தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பள்ளி இறுதி வகுப்பில் படிக்கும் மாணவர்கள் நுழைவுத்தேர்வு எழுதுவதற்காக ஆயத்தமாகி வருகின்றனர்.
மேலும் அரசு பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெறுவதற்காக கடந்த 2017ம் ஆண்டு அரசு பள்ளிக்கூடங்களில் சிறப்பு பயிற்சி வகுப்புகளை தமிழக அரசு நடத்தியது.
இதில் கிராமப்புற மாணவர்கள் பெரும்பான்மையாக கலந்து கொண்டு பயிற்சி பெற்று நீட் தேர்வுகளில் வெற்றி பெற்றனர்.இந்நிலையில், இந்தாண்டு நீட் தேர்வு வரும் மே 3ம் தேதி நடைபெற உள்ளது. நீட் தேர்வுக்கு அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நீட் பயிற்சி வகுப்புகள் நடத்த அரசு உத்தரவிட்டது.
அதன்படி, வேலூர் அரசு மாதிரி பள்ளியில் கடந்த 30ம் தேதி முதல் 70 மாணவ, மாணவிகளுக்கு நீட் பயிற்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுகுறித்து பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், ‘வேலூர் அரசு மாதிரி பள்ளியில் கடந்த 30ம் தேதி தொடங்கி நீட் பயிற்சி ஏப்ரல் 30ம் தேதி நடைபெறுகிறது.
இப்பயிற்சியில், 30 மாதிரி பள்ளி மாணவர்களும், 40 அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்கள் 70 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
நீட் தேர்வில் வெற்றி பெறும் வகையில் இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் ஆகிய பாடப்பிரிவுகளில் சிறந்த பயிற்சியாளர்களைக் கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி அளித்தும் மேலும், அப்பயிற்சியின் போது தினந்தோறும் அலகுத் தேர்வு மற்றும் திருப்புதல் தேர்வுகளும் நடத்தப்படுகிறது’ என்றனர்.
