திருமலை : வனப்பகுதியில் இருந்து தண்ணீர் தேடி கிராமத்திற்கு புகுந்த சிறுத்தை குட்டியை நாய்கள் கடித்து கொன்றது. ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் துவ்வூர் மண்டலம் சின்னபாகரபுரம் கிராமம் வனப்பகுதியையொட்டி உள்ளது.
இந்நிலையில் நேற்று வனப்பகுதியில் இருந்து சின்னபாகரபுரம் கிராமத்திற்கு தண்ணீர் தேடி சிறுத்தை குட்டி ஒன்று வந்தது. இதனை கண்ட கிராம மக்கள் அனைவரும் அலறி அடித்து வீட்டிற்குள் ஓடினர். ஆனால் அங்கிருந்த தெரு நாய்கள் சிறுத்தை குட்டியை துரத்திச்சென்று கடித்து குதறியது.
இதில் சிறுத்தை குட்டி பரிதாபமாக இறந்தது. இறந்த சிறுத்தையைப் பார்க்க, சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அந்த பகுதியில் திரண்டனர். மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறை அதிகாரிகள் சிறுத்தையை மீட்டு வனப்பகுதிக்கு கொண்டு சென்று அடக்கம் செய்தனர். கோடைக்காலத்தில் வெயில் சுட்டெரிப்பதால் வனப்பகுதியிலும் தண்ணீர் குட்டைகள் நீரின்றி வறண்டு உள்ளது.
இதனால் வன விலங்குகள் வனப்பகுதியையொட்டி உள்ள கிராமங்களுக்கு வர தொடங்கி உள்ளது. எனவே வனத்துறை அதிகாரிகள் வன விலங்குகளுக்கு தேவையான உணவு, தண்ணீர் அதன் வாழ்விடத்தில் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
