பெரணமல்லூர் : பெரணமல்லூர் பகுதியில் இயங்கி வரும் சிறிய ஓட்டல்கள் காஸ் தட்டுப்பாட்டால் விறகு பயன்பாட்டிற்கு மாறி வருகின்றனர்.ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடத்தி வரும் போரால் வளைகுடா அரபு நாடுகளில் இருந்து எரிபொருள் ஏற்றுமதி வெகுவாக பாதிக்கப்பட்டு காஸ் உள்ளிட்ட பெட்ரோலிய பொருட்களின் மீது தட்டுப்பாடு நிலவி வருகிறது.
இதனால் பொதுமக்களுக்கு சிலிண்டர் கிடைக்கவில்லை. இருப்பினும் ஒரு சிலிண்டர் பெற்றதும், அடுத்த சிலிண்டர் எடுக்க ஒரு மாதம் வரை காத்திருக்கும் சூழல் ஏற்பட்டு உள்ளது. இப்படி தட்டுப்பாடு நிலவும் சூழலில் சிலிண்டர் விலையும் ரூ.60 விலை உயர்ந்தது. பிளாக் மார்க்கெட்டில் கிடைக்கும் சிலிண்டர் விலை இரண்டு மடங்கு ஏற்றத்துடன் ரூ.2 ஆயிரம் வரை விற்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
வீட்டு பயன்பாட்டிற்கு கிடைக்கும் சிலிண்டரின் நிலை இப்படி என்றால் ஓட்டல் உள்ளிட்ட வணிக நிறுவனங்களுக்கு கொடுக்கப்படும் சிலிண்டர் தட்டுப்பாடு இதைவிட மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் கிராமப்புறங்களில் பெரும்பாலான டீக்கடைகள் மூடப்பட்டு குறிப்பிட்ட நேரங்களில் திறந்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அதன்படி, பெரணமல்லூர் உள்ளிட்ட பகுதியில் உள்ள சிறிய ஓட்டல்களில் பகல் நேரங்களில் சிக்கன் ரைஸ், எக் ரைஸ், சிக்கன் 65 என விதவிதமான உணவுகளை கொடுக்கும் பாஸ்ட் புட் உணவகங்கள் மூடப்பட்டுள்ளது.
இந்த உணவுகளில் பிரியாணி மட்டும் விறகு அடுப்பு மூலமாக செய்து வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து கடை உரிமையாளர்கள் கூறுகையில், போர் தொடங்குவதற்கு முன்பாக எங்களுக்கான சிலிண்டர் வாரத்துக்கு இரண்டு முறை கிடைத்து வந்தது.
தற்போது மாதத்திற்கு ஒன்று கூட கிடைப்பதில் சிரமமாக உள்ளது. இந்த தட்டுப்பாட்டால் வாடிக்கையாளர்களுக்கு உரிய நேரத்தில் உணவு கொடுப்பதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு வேலையாவது அசைவ உணவு கொடுக்கலாம் என்ற நோக்கில் பிரியாணி மட்டும் விறகு அடுப்பில் செய்து தருகிறோம். வணிக சிலிண்டர் தட்டுப்பாட்டால் ஓட்டல்கள் இயங்கி வருவது கடும் சவாலாக உள்ளது என கூறினர்.
ஒரு டன் விறகு ரூ.6 ஆயிரம்
காஸ் தட்டுப்பாட்டால் பெரும்பாலான ஓட்டல்கள் விறகு அடுப்பிற்கு மாறி உள்ளனர். இதனால் ஓட்டல்களில் டன் கணக்கில் விறகு வாங்கி குவித்து வருகின்றனர். இதனால் விறகு விலை டன் ஒன்றுக்கு ரூ.1500 முதல் ரூ.2 ஆயிரம் வரை விலையேற்றம் ஏற்பட்டுள்ளதாக ஓட்டல் உரிமையாளர்கள் தெரிவித்தனர். அதாவது முன்பு டன் ஒன்றிற்கு ரூ.3500 என இருந்து வந்த விறகு, தற்போது ஒரு டன் ரூ5 ஆயிரம் முதல் ரூ.6 ஆயிரம் வரை விற்கப்பட்டுகிறது.
