நெல்லை, தென்காசி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம்: விஜய் வாகனத்தை பின்தொடர்ந்து வந்த பைக்குகள் அடுத்தடுத்து மோதல்

 

போட்டோ கொடுக்க ரோட்டில் ஓடி வந்த ரசிகரை பாதுகாவலர்கள் தள்ளிவிட்டதால் பரபரப்பு

தூத்துக்குடி: தவெக தலைவர் நடிகர் விஜய், நெல்லை, தென்காசி மாவட்ட தவெக வேட்பாளர்களை ஆதரித்து நெல்லையில் இன்று பிரசார கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். இதையொட்டி அவர், சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று நண்பகல் 11.40 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையம் வந்தார். அவரை வரவேற்க விமான நிலையத்தில் நிர்வாகிகள், தொண்டர்களுக்கு அனுமதியில்லை. அதனால் விமான நிலையத்தின் வெளியே காத்திருந்த நிர்வாகிகள் மற்றும் தவெக வேட்பாளர்கள் தூத்துக்குடி நாத், திருச்செந்தூர் முருகன், கோவில்பட்டி பாலசுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள், விஜய்க்கு பூங்கொத்து மற்றும் சால்வை வழங்கி வரவேற்றனர்.

அப்போது ரசிகர்கள், தொண்டர்கள், விஜய் கார் வருவதை கண்டவுடன் போலீசார் அமைத்திருந்த தடுப்புகள் மற்றும் காம்பவுண்ட் சுவரை தாண்டி விஜய்யை காண முண்டியடித்தனர். ரசிகர்கள் பட்டாளம், காருக்கு பின்னால் ஓடியபோது விஜய் பாதுகாப்புக்கு வந்திருந்த பவுன்சர்கள், ரசிகர்களை காரில் பின்தொடராமல் தடுத்தனர். அப்போது ரசிகர் ஒருவர், விஜய்யிடம் வழங்குவதற்காக விஜய் படத்துடன் காத்திருந்த நிலையில் விஜய் காரை நெருங்க முயன்றார். ஆனால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பவுன்சர்கள், ரசிகரை தடுத்து தள்ளி விட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் ரசிகர்கள், தொண்டர்கள் விஜய் படம் மற்றும் பொக்கை வைத்து வரவேற்க காத்திருந்தனர். ஆனால் ரசிகர்களை கண்டு கொள்ளாமல் விஜய், அங்கிருந்து காரில் மின்னல் வேகத்தில் நெல்லை நோக்கி புறப்பட்டு சென்றார். வாகைகுளம் டோல்கேட் பகுதியில் வந்தபோது அங்கு காத்திருந்த ரசிகர்கள், தொண்டர்கள், பெண்கள் ஆகியோர் ரோஜா பூ மற்றும் மாலையை விஜய் அமர்ந்திருந்த கார் மீது எறிந்தனர். அப்போது போலீசார் அமைத்திருந்த போிகார்டு மற்றும் கயிற்றை தடுத்து பின்னாலே ஓடினர். அவர்களை போலீசார் தடுத்து கட்டுப்படுத்தினர்.

பின்னர் கட்சி நிர்வாகிகள் தங்களது கார்களில் விஜய் காரை பின்தொடர்ந்து நெல்லைக்கு சென்றனர். மேலும் ஏராளமான இளைஞர்கள், பைக்குகளில் விஜய் காரை பின்தொடர்ந்து சென்றனர். அப்போது ஒரு பைக்கில் சென்ற ரசிகர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அந்த பைக் மீது பின்னால் வாகனங்கள் அடுத்தடுத்து மோதியது. பைக்குகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 7 பேர் காயம் அடைந்தனர். இருப்பினும் எதை பற்றியும் கவலைப்படாமல் விஜய், வாகனத்தில் சென்று கொண்டே இருந்தார்.

Related Stories: