தஞ்சையில் உரிய ஆவணங்கள் இன்றி டூவீலரில் எடுத்து வந்த ரூ.1.26 லட்சம் பறிமுதல்

தஞ்சை, ஏப்.3: தஞ்சையில் உரிய ஆவணங்கள் இன்றி இருசக்கர வாகனத்தில் கொண்டு வந்த ரூ.1.26 லட்சத்தை தேர்தல் பறக்கும் படை பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் வரும் 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை ஒட்டி தேர்தல் பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழு அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் . தஞ்சை மாவட்டத்தில் 72 பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு சோதனை நடந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று தஞ்சை கீழவாசல் நால் ரோடு பகுதியில் பறக்கும் படை அதிகாரி ராஜ்குமார் தலைமையில் காவலர்கள் மற்றும் குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை இட்டனர்.

அதில் ரூ.1 லட்சத்து 26 ஆயிரத்து 170 ரொக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த நபரிடம் நடத்திய விசாரணையில் அந்த பணத்திற்கு உரிய ஆவணம் இல்லாதது தெரியவந்தது. இதனை தொடர்ந்து உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.1,26,170 பறிமுதல் செய்யப்பட்டு தஞ்சை தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.

 

Related Stories: