திருப்பூர், ஏப். 3: தமிழகம் முழுவதும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த 11ம் தேதி தொடங்கியது. தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என 5 பாடங்களுக்கான தேர்வு நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தில் 109 தேர்வு மையங்களில் 29,444 மாணவ மாணவிகள், 1237 தனித்தேர்வுகள் என கலந்து கொண்டு தேர்வு எழுதினார். சமூக அறிவியல் பாடத்துடன் நேற்று தேர்வு நிறைவடைந்த நிலையில் தேர்வு மையத்திற்கு வெளியே வந்த மாணவ மாணவிகள் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
தொடர்ந்து விருப்ப மொழி பாடத்திற்கான தேர்வு வருகின்ற 6ம் தேதி நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தாலும் திருப்பூரில் அந்த தேர்விற்கான தேர்வர்கள் இல்லாததன் காரணமாக நேற்றுடன் தேர்வு நிறைவடைந்தது. தேர்வு முடிந்து வெளியே வரும் மாணவ மாணவிகள் ஏதேனும் அசம்பாத சம்பவங்களில் ஈடுபடுவதை தவிர்க்க போலீசார் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
