வேதாரண்யம், ஏப்.3: நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா அலுவலகத்தில் 100% வாக்களிக்கும் நோக்கில் மாற்றுத்திறனாளிகள் சைக்கிள் பேரணி நடத்தினர். வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் வரும் 23ம் தேதி நடைபெறும் சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு கட்டாயம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து வாக்காளர்களாகிய பொதுமக்களிடம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, வேதாரண்யம் வட்டாட்சியர் அலுவலகத்தில்இருந்து பேருந்து நிலையம் வரை மாற்றுத்திறனாளிகள், வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 100 சதவீதம் வாக்களிக்கும் நோக்கில் வாக்காளர் சைக்கிள் பேரணி நடத்தினர். இதில் தேர்தல் தொடர்பான மற்றும் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் பதாகைகளை ஏந்தியும், முழக்கமிட்டும் ஊர்வலத்தில்சென்றனர்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் பவணந்தி கொடி அசைத்து ஊர்வலத்தை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் வேதாரண்யம் வருவாய் கோட்டாட்சியர் கண்ணன், வட்டாட்சியர் ஜெயசீலன் மற்றும் வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் ரவிச்சந்திரன் மாற்று திறனாளிகள் அலுவலர் கார்த்திகேயன் மற்றும் வருவாய்த்துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
